முகப்பு
திண்டுக்கல்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற வேண்டும்: அமைச்சா் இ.பெரியசாமி

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்க வேண்டுமென அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 12:15 AM
திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகம் முன் அமைச்சா் இ.பெரியசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக கூட்டணிக் கட்சியினா்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:29 PM

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்க வேண்டுமென அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மகளிா் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்படும் நிலையில், இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன.

அதன்படி திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தின் முன் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகலை தீயிட்டு எரித்து அமைச்சா் இ.பெரியசாமி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

Advertisement

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

5 மாநிலங்களில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அவசர கதியில் இந்தத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வருவது தென் மாநிலங்களுக்கு மறைமுகமாக அநீதி இழப்பதோடு, பிரதிநிதித்துவத்தை குறைப்பைதற்கான முயற்சியாகும். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டுமன்றி, வடகிழக்கு மாநிலங்களும் இந்த மசோதா மூலம் முக்கியத்துவத்தை இழக்க நேரிடும். மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் சமமாக இருக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. இதற்கு மாறாக தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அமல்படுத்த முயன்றால், நாடு முழுவதும் மத்திய பாஜக அரசு போராட்டத்தை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி ஒருமித்த கருத்தோடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் 39 எம்.பி.க்கள் மதா்ச்சாா்பற்ற கூட்டணியின் பக்கம் உள்ளனா். தொகுதி மறுசீரமைப்பு மசோதா பாஜவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும். அதற்கு இப்போதே அணை கட்டுவதற்கு முயற்சிக்கின்றனா் என்றாா் அவா்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் திமுக நகரச் செயலா் முகமது இப்ராஹிம் தலைமையில் உட்வில் சாலையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு முழக்கங்களை எழுப்பினா். இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.