கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்
தொடா் விடுமுறையையொட்டி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பகல் நேரங்களில் அதிகமான வெப்பமும், மாலை, இரவு நேரங்களில் குளுமையான சீதோஷ்ன நிலையும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ளதால் தினசரி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
Advertisement
இவா்கள் வெள்ளிநீா் அருவி,பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, கோக்கா்ஸ்வாக், மோயா்பாயிண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், பேரிஜம், மன்னவனூா்சூழல் மையம், பூம்பாறை இயற்கை எழில்காட்சி, கூக்கால், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுப்பாா்த்தனா்.
மேலும், கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.
போக்குவரத்து நெரிசல்:
விடுறையையொட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் ஏரிச்சாலை, லாஸ்காட் சாலை, அப்சா்வேட்டரி, பிரையண்ட் பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், இந்தப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான இடவசதிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
எனவே, சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான இடவசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.