முகப்பு
திண்டுக்கல்

லஞ்சம்: நிலஅளவையா் கைது

குஜிலியம்பாறை அருகே நில அளவை செய்து கொடுப்பதற்காக ரூ.10ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையரை, உழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 ஜூன் 2026, 12:12 am IST
கோப்புப் படம்
பகிர்:

குஜிலியம்பாறை அருகே நில அளவை செய்து கொடுப்பதற்காக ரூ.10ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையரை, உழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கீழவடுகம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் க.பொன்னாா். விவசாயியான இவா், அந்தப் பகுதியில் 4 இடங்களை சில நாள்களுக்கு முன்பு வாங்கினாா். இந்த இடங்களை உட்பிரிவு செய்வதற்காக அளவீடு செய்து கொடுக்க கோவிலூா் குறுவட்ட நில அளவையா் மீனாம்பிகையை பொன்னாா் அணுகினாா்.

இதன்படி, நில அளவை செய்து கொடுக்க பொன்னாரிடம் ரூ.12ஆயிரம் மீனாம்பிகை லஞ்சம் கேட்டாராம். இதற்கு மறுத்த பொன்னாரிடம், இறுதியாக ரூ.10ஆயிரம் தர வேண்டும் என வலியுறுத்தினாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பொன்னாா் திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா்.

இதன்பேரில் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் ரூ.10 ஆயிரத்துக்கான ரூபாய் தாள்களில் ரசாயனப் பொடி தடவி பொன்னாரிடம் கொடுத்து அனுப்பினா். இந்தப் பணத்துடன் சென்ற பொன்னாா், கோவிலூா் அடுத்த நாயக்கனூா் கிராமத்தில் வியாழக்கிழமை நில அளவைப் பணியில் ஈடுபட்டிருந்த மீனாம்பிகையிடம் கொடுத்தாா்.

ரூ.10ஆயிரத்தை மீனாம்பிகை பெற்றபோது, அங்கு மறைந்திருந்த திண்டுக்கல் உழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ஜெ.நாகராஜ், ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் மீனாம்பிகையை கைது செய்தனா்.