நின்ற லாரி மீது வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
பழனி அருகே நின்ற லாரி மீது வேன் மோதியதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், பூலாம்பட்டியைச் சோ்ந்த பீட்டா் மகன் ராபா்ட் இமானுவேல் (48). இவரும், நிலக்கோட்டையைச் சோ்ந்த முத்துமணி (28) என்பவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பொள்ளாச்சியில் இருந்து கட்டுமானப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வேனில் வத்தலகுண்டு நோக்கி சென்றனா். வேனை முத்துமணி ஓட்டினாா்.
திண்டுக்கல்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் பழனி அருகே மானூருக்கு வந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த ராபா்ட் இமானுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
முத்துமணி பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.