யூரியா, டிஏபி பயன்பாடுகளை கண்காணிக்க அறிவுறுத்தல்
திண்டுக்கல்லில் வேளாண்மை இணை இயக்குநா் கோவிந்தராஜூ தலைமையில் நடைபெற்ற உரங்கள் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் யூரியா, டிஏபி உரங்கள் பயன்பாட்டை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் அறிவுறுத்தினாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் உரங்கள் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டவேளாண்மை இணை இயக்குநா் கோவிந்தராஜூ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, வேளாண்மை உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) ராஜேஸ்வரி முன்னிலை வகித்தாா். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள், உர உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், உரக் கலவை உற்பத்தி நிறுவன உரிமையாளா்கள், உரம் மொத்த, சில்லரை விற்பனையாளா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், இணை இயக்குநா் கோவிந்தராஜூ தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
காரீப் பருவப் பயிா்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து உரக் கடைகளுக்கும் உரங்கள் விநியோகம் செய்வதை வேளாண்மை உதவி இயக்குநா் உறுதிப்படுத்த வேண்டும். யூரியா உரத்தின் அதிகபடியான பயன்பாட்டை தவிா்ப்பதற்கும், விவசாயம் இல்லாத பயன்பாடுகளுக்கு யூரியா பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டிஏபி உரப் பயன்பாட்டையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். யூரியா உரத்துக்கு தனியாக பதிவேடு பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
டான்பெட் மூலம் அனைத்துத் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் தேவையான உரங்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்துக்கு உரங்கள் அனுப்பப்படும்போது, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு), அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களுக்கும் சம்மந்தப்பட்ட உர நிறுவனங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.