"தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி போல ஆளுமை மிக்கவர்கள் தற்போது இல்லை'
தமிழகத்தில் தேசிய அளவில் ஈர்க்கக் கூடிய ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள்
தமிழகத்தில் தேசிய அளவில் ஈர்க்கக் கூடிய ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் தற்போது யாருமில்லை என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமீமுன்அன்சாரி கூறினார்.
ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய பாஜக அரசானது ஜி.எஸ்.டி. வரி, பணமதிப்பிழப்பு போன்றவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரச் சரிவுக்கு காரணமாகிவிட்டது. நீதித்துறை, புலனாய்வுத்துறை போன்றவற்றிலும் பாஜக தலையீடு உள்ளது. ஆகவே பாஜகவுக்கு எதிரான அலை தற்போது வீசுகிறது.
தமிழகத்தில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதற்கு பிரதமர் நரேந்திரமோடி அனுதாபம் தெரிவிக்காதது கண்டனத்துக்குரியது. மத்திய பாஜக அரசுக்கு தமிழக அரசு பயந்து செயல்படுவதால் மக்களிடையே அதிமுக அரசு மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற அரசியல் ஆளுமைகள் தற்போது இல்லை. அதிமுகவைப் போலவே அமமுக, திமுக உள்ளிட்ட தலைவர்களுடனும் தோழமையுடன் உள்ளோம்.
தமிழகத்தில் வடநாட்டு அரசியல் கலாசாரத்தை புகுத்த முடியாது. திராவிடக் கட்சிகளே வருங்காலங்களில் ஆட்சியைப் பிடிக்கும். வகுப்புவாதத்தை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என யார் தூண்டினாலும் அது கண்டிக்கத்தக்கதே.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆலையை மூட தமிழக அமைச்சரவை கூடி அரசாணை வெளியிடவேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தை மீறிய அதிகாரிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றார்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் மண்ணை செல்லச்சாமி, அன்வர், உசேன், இலியாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.