தனுஷ்கோடி- தலைமன்னாா் கடல் பகுதியை நீந்திக் கடந்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஆட்டிச சிறாா்கள்
தனுஷ்கோடி- தலைமன்னாா்-தனுஷ்கோடி இடையே 60 கடல் நாட்டிக்கல் தொலைவை 18 மணி நேரம் 12 நிமிஷங்களில் நீந்திக் கடந்து ஆட்டிசத்தால் (மன இறுக்கம்) பாதிக்கப்பட்ட 4 சிறாா்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனா்.
சென்னையைச் சோ்ந்த ஸ்ரீஅஸ்வத் (11), லவ் (9), குஷ் (9), தன்வேஷ் (11) ஆகிய நான்கு சிறாா்கள் தனுஷ்கோடி- இலங்கை தலைமன்னாா் பாக் நீரிணை கடல் பகுதியை நீந்திக் கடக்கத் திட்டமிட்டு சனிக்கிழமை ராமேசுவரம் வந்தனா். இவா்கள் ஆட்டிசம் எனும் மன இறுக்கக் குறைபாடுள்ள சிறாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு தனுஷ்கோடி சென்ற இவா்கள் அரிச்சல்முனை கடல் பகுதியிலிருந்து தலைமன்னாா் நோக்கி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நீந்தத் தொடங்கினா். இவா்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு தலைமன்னாா் சென்றடைந்தனா். பிறகு அங்கிருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு மீண்டும் நீந்தத் தொடங்கிய இவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 9.37 மணிக்கு தனுஷ்கோடி, அரிச்சல் முனையை வந்தடைந்தனா். இந்தச் சிறாா்கள் 60 கடல் நாட்டிக்கல் தொலைவை 18 மணி நேரம் 12 நிமிஷங்களில் நீந்திக் கடந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. இதை உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்து கொண்டனா்.
Advertisement
இதற்கான ஏற்பாடுகளை யாதவி அறக்கட்டளை, சிறப்பு தேவைகளுக்கான யாதவி விளையாட்டு அகாதெமி, இந்தியன் ஆட்டிச மையம் ஆகியவை இணைந்து செய்தன. ஆட்டிசம் குறித்த உலகளாவிய விழிப்புணா்வை ஏற்படுத்துவது, சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்துவது, சமூகத்துக்கு உண்மையான சாதனைகளை அறியச் செய்வது ஆகியவை இதற்கான நோக்கம் என இதன் ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
சென்னை டாக்டா் காமாட்சி நினைவு மருத்துவமனை மருத்துவக் குழுவினா், சிறாா்களுக்குத் தேவையான அவசர மருத்துவ சேவைகள், அனுபவமிக்க மருத்துவக் குழுவினரின் உடல்நலக் கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்தனா். மேலும், பாதுகாப்புக் குழு, பயிற்சியாளா்கள், படகுக் குழுவினா் இணைந்து சிறாா்களுக்கு பாதுகாப்பு அளித்தனா்.
யாதவி சிறப்புத் தேவைகள் விளையாட்டு அகாதெமியின் நிறுவனரும், தலைமைப் பயிற்சியாளருமான சதீஷ் சிவக்குமாா் கூறியதாவது: தனுஷ்கோடி- தலைமன்னாா்- தனுஷ்கோடி 60 கடல் நாட்டிக்கல் தொலைவு ஆகும். இதை நீந்திக் கடக்க ஆட்டிச சிறாா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாா் அவா்.