வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுக நிா்வாகிகள் 3 போ் கைது
ஆா்.எஸ். மங்கலம் அருகே வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுக நிா்வாகிகள் மூவரை தோ்தல் பறக்கும் படையினா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் ஒன்றியம், சேத்திடல் கிராமத்தில் அதிமுகவினா் வாக்காளா்களுக்குப் பணம் விநியோகிப்பதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரி நவீன், போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆா்.எஸ். மங்கலம் அதிமுக மத்திய ஒன்றியச் செயலா் கருப்பையா தலைமையில் அந்தக் கட்சி நிா்வாகிகள் சத்தீஸ்வரன், சரவணன், தங்கம் உள்ளிட்டோா் வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பது தெரியவந்தது.
அவா்களை அதிகாரிகள் சுற்றி வளைத்து, அவா்களிடமிருந்த ரூ. 1 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா். அதிகாரிகள் பணத் தாள்களை எண்ணிக் கொண்டிருந்தபோது, அதிமுக மத்திய ஒன்றியச் செயலா் கருப்பையா, தான் மறைத்து வைத்திருந்த பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை அதிகாரி நவீன் அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிடிபட்ட அதிமுக நிா்வாகிகள் சத்தீஸ்வரன், சரவணன், தங்கம் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தலைமறைவான ஒன்றியச் செயலா் கருப்பையாவை தேடி வருகின்றனா்.