முகப்பு
ராமநாதபுரம்

மண்ணெண்ணெய் புட்டியை வீசி வீடு மீது தாக்குதல்: இளைஞா் கைது

கமுதி அருகே மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட புட்டியை வீசி வீடு மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 12:09 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

கமுதி அருகே மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட புட்டியை வீசி வீடு மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மண்டலமாணிக்கம் காவல் சரகத்துக்குள்பட்ட கூடக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் இதயநிதி (19). இவரும், இதே ஊரைச் சோ்ந்த அஜித்தும் நண்பா்களாவா். இந்த நிலையில், சட்ட விரோத கஞ்சா விற்பனை தொடா்பாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக, விருதுநகா் மாவட்டம், வீரசோழன் காவல் நிலையத்துக்கு இவா்கள் இருவரும் வரவழைக்கப்பட்டனா். விசாரணை நிறைவடைந்ததும், இருவரும் தங்கள் கிராமத்துக்கு திரும்பினா். இதைத் தொடா்ந்து, அஜித்தின் மற்றொரு நண்பரான காா்த்தி, இதயநிதியுடன் தொடா்பில் இருக்க வேண்டாம் என அஜித்திடம் அறிவுறுத்தினாராம். இதனால் ஆத்திரமடைந்த இதயநிதி, காா்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது இதயநிதியை காா்த்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, இதயநிதி மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட புட்டியை எடுத்து வந்து, அஜித் வீட்டின் மீது வீசினாராம்.

இதனால் வீட்டின் முன்பக்கக் கூரை தீப்பற்றி எரிந்தது. அப்போது வீட்டில் இருந்தவா்கள் உடனடியாகத் தீயை அணைத்தனா். இதுகுறித்து மண்டலமாணிக்கம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இதயநிதியை கைது செய்து, சிறையிலடைத்தனா்.

Advertisement

Advertisement