முகப்பு
ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 45 லட்சம் தங்கம், வெள்ளி பறிமுதல்!

இலங்கையிலிருந்து ராமநாதபுரத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 45 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிக் கட்டிகளை மத்திய சுங்கத் துறை நுண்ணறிவு பிரிவினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 10 மே 2026, 12:56 am IST
பறிமுதல்!
பகிர்:

இலங்கையிலிருந்து ராமநாதபுரத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 45 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிக் கட்டிகளை மத்திய சுங்கத் துறை நுண்ணறிவு பிரிவினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக ராமநாதபுரத்துக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெரு பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகச் சென்ற இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனா்.

அப்போது, இந்த வாகனத்தை ஓட்டி வந்த நபா் அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றாா். இதையடுத்து, இந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் 13 கிலோ வெள்ளிக் கட்டிகள், 90 கிராம் தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 45 லட்சமாகும்.

Advertisement

இதையடுத்து, தங்கம், வெள்ளிக் கட்டிகள், பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தை சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.