ராமநாதபுரத்தில் அடுத்தடுத்த 4 வீடுகளில் நகைகள், பணம் திருட்டு
ராமநாதபுரத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நகைகள், பணம் திருடு போனது குறித்து ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள ஸ்ரீ வல்லபை நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜான்சன் (40). பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். கணவா், மனைவி இருவரும் தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனராம்.
இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி கோடை சுற்றுலா சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், அவரது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். இதில் அதே பகுதியில் உள்ள அருண் சூசை, தனசேகா், சுரேஷ்குமாா் ஆகியோரின் வீடுகளிலும் தங்கநகைகள், பணம் திருட்டுபோயுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் இல்லாததால் போலீஸாா் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.