சிவகங்கை மாவட்டத்தில் "ஜாக்டோ- ஜியோ' கூட்டமைப்பினர் சாலை மறியல்: 2 ,159 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை சிவகங்கை மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில்
கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை சிவகங்கை மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த 1,289 பெண்கள் உள்பட 2,159 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து, இரண்டாவது நாளாக "ஜாக்டோ-ஜியோ' கூட்டமைப்பினர் புதன்கிழமை மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில ஈடுபட்டனர்.
சிவகங்கை பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு "ஜாக்டோ-ஜியோ'' கூட்டமைப்பின் சிவகங்கை நகர் ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ, பஞ்சுராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகங்கை சரக துணை காவல் கண்காணிப்பாளர் அப்துல் கபூர், சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் அழகர் உள்ளிட்ட போலீஸார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 134 பெண்கள் உள்பட 220 பேரை போலீஸார் கைது செய்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோன்று காளையார்கோவில், காரைக்குடி, சிங்கம்புணரி உள்ளிட்ட சிவகங்கை மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,289 பெண்கள் உள்பட 2,159 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மானாமதுரை: "ஜாக்டோ- ஜியோ' அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் அதன் ஒருங்கிணைப்பு கமிட்டி உறுப்பினர் பிச்சை தலைமையில் மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிவகங்கை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் மறியல் செய்த 92 பெண்கள் உள்பட 236 பேரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திருப்புவனம்: திருப்புவனத்தில் சந்தைத்திடலில் "ஜாக்டோ-ஜியோ' வட்டத் தலைவர் மரியஆரோக்கியதாஸ் தலைமையில் மறியல் செய்த 115 பெண்கள் உள்பட 260 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இளையான்குடி: இளையான்குடியில் கண்மாய்கரை பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய 70 பெண்கள் உள்பட 140 ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்துக்கு அமைப்பின் வட்ட ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
திருப்பத்தூர்: இங்குள்ள பழைய பேருந்து நிலையம் அருகே "ஜாக்டோ- ஜியோ' அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன், முத்துமாரிப்பன், மீனாட்சிசுந்தரம், முத்துப்பாண்டி, மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர் சிங்கராயர், பழனியப்பன், கருப்பையா, ஜெகன், மகாலிங்கஜெயகாந்தன் உள்ளிட்ட 229 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் நகர் காவல் கண்காணிப்பாளர் அண்ணாத்துரை தலைமையிலான போலீஸார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
தேவகோட்டை: தேவகோட்டையில் வேலைநிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து புதன்கிழமை காலையில் தியாகிகள் பூங்கா அருகே மறியல் செய்ய முயன்ற ஜேக்டோ, ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆண்கள் 158 பேர், பெண்கள் 54 பேரை போலீஸார் கைதுசெய்து பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.