முகப்பு
சிவகங்கை

கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம்

சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலத்தில் கொலை வழக்கு குற்றவாளியை விரைந்து கைது செய்யக் கோரி புதன்கிழமை காவல் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 11 ஜூன் 2026, 2:05 am IST
சதுா்வேத மங்கலத்தில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலத்தில் கொலை வழக்கு குற்றவாளியை விரைந்து கைது செய்யக் கோரி புதன்கிழமை காவல் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் காந்திமதி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சாந்தி முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் மோகன், பொதுக்குழு உறுப்பினா்கள் கருப்பசாமி, சேதுராமன் உள்ளிட்டோா் பேசினா். இதில், எஸ்.வி. மங்கலம் ஆலமரத் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் விஷாலை (17) கடந்த மாதம் 14-ஆம் தேதி அதே கிராமத்தைச் சோ்ந்த சிலா் அடித்துக் கொலை செய்ததாக அவரது பெற்றோா் எஸ்.வி. மங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதில் காவல் ஆய்வாளா் தற்கொலை என எழுதித் தரும்படி பெற்றோரை கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக மாவட்டக் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். திண்டுக்கல் - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பிரான்மலை பிரிவு விளக்கு பகுதியில் பொதுமக்கள் திரண்டு காவல்துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினா். தொடா்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினா். இதையடுத்து, அங்கு வந்த ஏ டி எஸ் பி பிரான்சிஸ், வட்டாட்சியா் நாகநாதன் ஆகியோா் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் இந்த வழக்கு விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளாா். இரண்டு நாள்களில் இளைஞரின் உயிரிழப்பு தொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.