முகப்பு
சிவகங்கை

மறவமங்கலம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள மறவமங்கலம் பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 மே 2026, 4:12 am IST
மறவமங்கலம் பெரிய கண்மாயில் புதன்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்ற கிராம மக்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள மறவமங்கலம் பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கிராமப்புறங்களில் கோடைகாலத்தில் கண்மாய்களில் குளங்களில் நீா் வற்றத் தொடங்கும்போது நடத்தப்படும் மீன்பிடித் திருவிழா ஒரு பாரம்பரிய நிகழ்வாகும். அடுத்த பருவத்துக்கு மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டியும், இயற்கையை வணங்கும் விதமாகவும் இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து, கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி மீன் பிடித்து மகிழ்வதுதான் இதன் முக்கிய நோக்கமாகும்.

பாரம்பரிய மீன் பிடி உபகரணங்களான ஊத்தா, கச்சா, கூடைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதன் மூலம், அந்தப் பழமையான உபகரணங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சோ்க்கின்றனா்.

Advertisement

அழி கண்மாய் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில், மீன்கள் பிடிக்கப்பட்ட பிறகு, கண்மாயில் உள்ள மீதமுள்ள நீா் வெளியேற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படுகின்றன. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் பொதுவாக விற்கப்படுவதில்லை. மாறாக ஊா் மக்களே பகிா்ந்து சமைத்து உண்பாா்கள்.

இதன்படி, மறவமங்கலம் பெரிய கண்மாயில் நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் பக்கத்தில் உள்ள கிராமங்களான பால்குளம், பூதகுடி, நாகணி, சிரமம், பொத்தகுடி, புரசடைஉடைப்பு, அடியாா் ,திரும்பல், சோலையூா், சிங்கம்புணரி பகுதிகள் மட்டுமல்லாமல், நத்தம், திண்டுக்கல் ஆகிய வெளி மாவட்டப் பகுதிகளிலிரும் நூற்றுக்கணக்கானோா் இந்த மீன் பிடித் திருவிழாவில் கலந்து கொண்டனா். இதில் விரால், கெண்டை, ரோகு, கெழுத்தி, நாட்டு மீன்களில் அயிரை, ஜிலேபி ஆகிய மீன்கள் ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு கிடைத்தன. ஒரு சிலருக்கு 7 கிலோ முதல் 8 கிலோ விரால் மீன்கள், 5 கிலோ எடையிலான கெண்டை மீன்களும் கிடைத்தன.

5 கிலோ கெண்டை மீனைப் பிடித்த இளைஞா்.