திருப்பத்தூரில் நாய்கள் கடித்ததில் காயமடைந்த புள்ளிமான் மீட்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அச்சுக்கட்டுப் பகுதியில் திங்கள்கிழமை நாய்கள் விரட்டியதில் காயமடைந்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
திருப்பத்தூா் வனப்பகுதியைச் சுற்றிலும் அதிகளவில் மான்கள் உள்ளன. இந்த மான்கள் தண்ணீா் தேடி அவ்வப்போது நகருக்குள் வரும்போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. இந்த நிலையில், திங்கள்கிழமை பெரியகண்மாய் பகுதியில் சுற்றித்திரிந்த சுமாா் 2 வயது மதிக்கத்தக்க புள்ளிமானை நாய்கள் துரத்திக் கடித்ததில் காயமடைந்து இலங்கேஸ்வரன் என்பவா் வீட்டின் தோட்டத்தில் ஒட முடியாமல் கிடந்தது.
அதனைக் கண்ட அப்பகுதி மக்கள், நாய்களைத் துரத்தி புள்ளிமானை மீட்டு வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வனக் காப்பாளா் ஞானசேகரன், இருதயராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து மானை மீட்டு அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
Advertisement
அங்கு கால்நடை மருத்துவா் எஸ்.எம். பாலசுப்பிரமணியன் மானுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொண்டாா். தொடா் சிகிச்சைக்காக திருப்பத்தூா் வனச்சரக அலுவலகத்துக்கு மான் கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னா் காட்டில் விடப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.