நீடாமங்கலத்தில் பயணிகள் நிழலகம் கட்டப்படுமா ?
நீடாமங்கலத்தில் பேருந்து பயணிகள் நிழலகம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலத்தில் பேருந்து பயணிகள் நிழலகம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நீடாமங்கலம் வழியாக சென்று வருகின்றன. பேருந்துகள் நீடாமங்கலம் - தஞ்சை சாலை அண்ணா சிலை பகுதியிலும், பாரத ஸ்டேட் வங்கி கிளை பகுதியிலும் நின்று செல்லும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட 2 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இந்த இரு இடங்களிலும் பயணிகள் நிழலகம் கிடையாது. ஆனால், பாரத ஸ்டேட் வங்கி பகுதியில் பயணிகளுக்காக கீற்று கொட்டகை அமைக்கப்பட்டிருந்தன. அந்த கொட்டகையும் கஜா புயலால் காணாமல் போனது.
இதேபோல், காரைக்கால், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர் பகுதியிலிருந்து தஞ்சாவூர், திருச்சி வழியாக செல்லும் பேருந்துகளும், சென்னை, கும்பகோணம் பகுதியிலிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் நின்று செல்ல நீடாமங்கலம் நடுக்கடைத் தெரு (மேலராஜவீதி), அண்ணா சிலை பகுதி ஆகிய இரு இடங்கள் உள்ளன. இந்த இடங்களிலும் பயணிகள் நிழலகம் அமைக்கவில்லை.
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி பகுதியில் பேருந்துக்காக பயணிகள் காத்திருக்க வேண்டிய இடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளுக்கு இடையூறு செய்யப்படுகிறது. கொளுத்தும் வெய்யிலாக இருந்தாலும், கொட்டும் மழையாக இருந்தாலும் பயணிகள் வெய்யிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் செல்ல வேண்டிய ஊர்களுக்கான பேருந்துகளில் ஏறிச் செல்கின்றனர்.
போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த நீடாமங்கலத்தில் வசதியான பேருந்து நிலையம் இல்லை. 3 ஆறுகளுக்குள் நீடாமங்கலம் இருப்பதாலும் ரயில்வே கேட் நெடுஞ்சாலைப் பகுதியில் இருப்பதாலும் பேருந்து நிலையம் அமைக்க இயலாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகில் ஏற்கெனவே பேருந்து நிலையத்துக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் கடந்த காலத்தில் தெரிவித்தது. அந்த முயற்சி கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருப்பினும், பேருந்து நிலையம் அமைக்க தாமதமானாலும், நீடாமங்கலத்தில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நிழலகம் கட்ட வேண்டியதன் அவசியத்தை மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட நிர்வாகமும் உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.