ரூ.1.98 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஆர். காமராஜ் வழங்கினார்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 1.98 கோடி மதிப்பிலான
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 1.98 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வழங்கினார்.
700 உழைக்கும் மகளிருக்கு ரூ.1.75 கோடி மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 72 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 23.12 லட்சம் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், நவீன காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கி மேலும் பேசியது:
உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், பெண்களை குடும்பத் தலைவராக கொண்டவர்களுக்கும், ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்ட மகளிர், தாழ்த்தப்பட்டோர், திருநங்கைகள், 35 வயதுக்கும் மேற்பட்ட திருமணமாகாத மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு செயல்படுத்தப்படுகிறது. அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்துக்கு 2017-18-ஆம் ஆண்டுக்கு 1,825 உழைக்கும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மூன்று கட்டங்களாக 1,125 உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனம்
வழங்கப்பட்டது.
தற்போது, நான்காம் கட்டமாக 700 பயனாளிகளுக்கு ரூ.1.75 கோடி மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 72 பயனாளிகளுக்கு ரூ.23.12 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், நவீன காதொலி கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் என மொத்தம் 772 பயனாளிகளுக்கு ரூ.1.98 கோடியில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் ஆர். காமராஜ்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.