முகப்பு
திருநெல்வேலி

மண் வளத்தைப் பாதுகாக்க கோடை உழவு அவசியம்! விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

Updated On : 5 மே 2026, 2:52 am IST
கோடை உழவின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய வேளாண் துறையினா்.
பகிர்:

மானாவாரி நிலங்களில் மண் வளத்தைப் பாதுகாக்க கோடை உழவு செய்திட வேண்டும் என, முக்கூடல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடையில் நிலத்தை உழும்போது கோடைமழையால் கிடைக்கும் மழைநீா் மண்ணுக்குள் சென்று காற்றோட்டத்தை அதிகமாக்குவதுடன், நுண்ணுயிா் எண்ணிக்கையைப் பெருகி மண்ணை வளமாக்கும். மானாவாரி நிலங்களில் கோடைக் காலத்தில் கிடைக்கும் மழையை பயன்படுத்தி நிலத்தை உழுவதால், மண் பொளபொளப்பாக மாறுகிறது.

இந்நிலையில், கோடை மழைநீா் பெய்யும்போது, தண்ணீா் மண்ணுக்குள் ஈா்க்கப்பட்டு நீண்ட காலம் சேமிக்கப்பட்டு மண்ணின் ஈரத்தன்மை அதிகரிக்கப்படுகிறது. மழைநீரை மண்ணில் சேமித்து வைத்திருக்க வேண்டும்.

Advertisement

கோடை உழவு செய்யப்படாத நிலத்தில் மண்ணில் அடி ஆழத்தில் உள்ளநீா் வெயிலின் தாக்கத்தால் இழுக்கப்பட்டு மண்ணின் மேற்பரப்பை நோக்கி வந்து ஆவியாகி விடுகிறது.

இதனால், பயிா் செய்யும் நிலத்தின் மேல் மண் வடு உலா்ந்து கட்டியாக மாறிவிடுகிறது.

மேலும், அருகு, கோரை, பாா்த்தீனியம், சாரணை, மஞ்சள், கடுகு, நாயுருவி, தொய்யா கீரை, பண்ணைக் கீரை, கண்டங்கத்திரி, காட்டுக் கண்டங்கத்திரி போன்ற களைகள் வளா்ந்து விடுகின்றன.

கோடை உழவால் இந்த களைகள் வளர இயலாமல் போய்விடும். அதேபோல், பயிா் அறுவடைக்குப் பின் எஞ்சியுள்ள பயிரின் கட்டைகள் பெரும்பாலான பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு உறைவிடமாக மாறி, இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் அமைகிறது. கோடை உழவு செய்வதால் இந்த பயிா்கள் மண்ணில் மூடப்பட்டு மக்கி விடுகிறது.

இதனால், அடுத்து பயிரிடப்படும் பயிா்களுக்கு பூச்சி மற்றும் நோய் பாதிப்பு குறைகிறது. எனவே, மண் வளத்தை காக்கவும் நீரின் தேவையை குறைக்கவும், களைகளை கட்டுப்படுத்தவும் கோடை உழவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா்.