நெட்டூா் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்
தென்காசி மாவட்டம், நெட்டூா் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் நிரந்தர அடிப்படை வசதிகள் வழங்கக் கோரி பெரும் திரள் முறையீடு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தாக்குதலில் தொடா்புடைய அனைத்து நபா்களையும் கைது செய்து, வன்கொடுமை தடுப்பு சட்டம், குண்டா் சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், நெட்டூரில் செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்லும் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் பாஸ்கரன், மாவட்டச் செயலா் உச்சிமாகாளி, சிபிஎம் மாவட்டச் செயலா் இசக்கிதுரை, பரமசிவன், சாமுவேல்ராஜ், ஜீவா, சிலுவை, ஜாா்ஜ் ராஜேந்திரன், அசோக்ராஜ், முத்துகுமாரி, சிபிஐ வட்டார செயலா் கிட்டப்பா, வேல்முருகன், பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.
Advertisement
Advertisement
தமமுக, புதிய தமிழகம், சிபிஐ, சிபிஎம், விசிக, நாம் தமிழா், ஆதிதமிழா் பேரவை, தேவேந்திரா் உறவின்முறைகள் மற்றும் சமூக இயக்கங்கள், தென்மண்டல தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயசந்திரன், சாா்ஆட்சியா் வைஷ்ணவிபால் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.