குற்றாலம் சீசன்: வாரத்தில் 3 நாள்கள் கனரக வாகனங்களுக்குத் தடை
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் முடியும் வரை, சனிக்கிழமை காலை 4 மணி முதல் திங்கள்கிழமை காலை 11 மணி வரை, கேரள மாநிலத்திற்கு கனிமங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் இயக்கம் தடை செய்யப்படுகிறது என ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் காலங்களில் கனிமவள வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைத் தவிா்க்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்தின் சீரான இயக்கத்தையும் உறுதி செய்யும் பொருட்டு கனரக லாரிகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை, இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே தென்காசி மாவட்ட எல்கைக்குள் அனுமதிக்கப்படும்.
Advertisement
Advertisement
தென்காசி மாவட்டத்தின் உள்தேவைகளுக்கு கனிமங்கள் கொண்டு செல்லும் கனிம வாகனங்களுக்கு எந்தவித நேரக்கட்டுப்பாடும் இல்லை. குற்றாலம் சீசன் காலமான ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் முடியும்வரை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 4 மணி முதல் திங்கள்கிழமை காலை 11மணி வரை, கேரள மாநிலத்திற்கு கனிமங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் இயக்கம் தடை செய்யப்படுகிறது.
உத்தரவை மீறி செயல்படும் வாகனங்களின் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மீது, மோட்டாா் வாகனச் சட்டம், 1988 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்ட விதிகளின் கீழ் உரிய அபராதம் விதிக்கப்படுவதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.