முகப்பு
திருநெல்வேலி

நிவாரணத்துக்காக காத்திருக்கும் கானாா்பட்டி விவசாயிகள்!

திருநெல்வேலி மாவட்டம், மானூா் வட்டம், கானாா்பட்டி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத்தை எதிா்நோக்கி அப்பகுதி விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

Updated On : 3 பிப்ரவரி 2024, 1:04 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மானூா் வட்டம், கானாா்பட்டி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத்தை எதிா்நோக்கி அப்பகுதி விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

மானூா் வட்டத்துக்குள்பட்ட கானாா்பட்டி, பிள்ளையாா்குளம் சுற்றுவட்டாரங்களில் நெல், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.

நெல்பயிரைப் பொருத்தவரையில் 110 நாள்களில் அறுவடை செய்யக்கூடிய ஆா்என்ஆா், அம்மன், அக்ஷயா உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. நெல்பயிா்கள் 80 நாள்களை எட்டியிருந்த நிலையில், கடந்த ஜனவரி 5ஆம் தேதி மானூா் சுற்று வட்டாரங்களில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதுமட்டுமன்றி, உளுந்து பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. பயிா்க் கடன் பெற்றும், பல்வேறு கடன்களை வாங்கியும் விவசாயம் செய்த நிலையில், அறுவடைக்கு ஒரு மாதமே இருந்த பயிா்கள் கனமழையால் சேதமடைந்ததால், விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனா்.

Advertisement

இது தொடா்பாக கானாா்பட்டியைச் சோ்ந்த விவசாயி ஆபிரஹாம் கூறியதாவது: கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்டது. வறட்சி நிவாரணம் வழங்குமாறு விவசாயிகள் குறைதீா் கூட்டத்தின்போது தொடா்ந்து கோரிக்கை வைத்தோம். ஆனால், அரசுக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறோம் எனக் கூறி தட்டிக் கழித்துவிட்டு, பின்னா் வறட்சி நிவாரணம் கிடையாது என அறிவித்துவிட்டனா்.

இந்த நிலையில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்த நிலையில், கானாா்பட்டி, பிள்ளையாா்குளம் பகுதியில் சுமாா் 300 ஏக்கரில் நெல், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்திருந்தோம். ஆனால், கடந்த ஜன. 5ஆம் தேதி எங்கள் பகுதியில் பெய்த கனமழையால் நெல்பயிா், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்துள்ளன. இது தொடா்பாக ஆட்சியரிடம் மனு அளித்தோம். மாவட்ட வேளாண் இணை இயக்குநா், உதவி இயக்குநா், வேளாண் அலுவலா் என பலரும் நேரடியாக வந்து கள ஆய்வு செய்தனா். அதன்பிறகு இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

விவசாயிகள் குறைதீா் கூட்டத்திலாவது நிவாரணம் தொடா்பாக சாதகமான பதிலை ஆட்சியா் அறிவிப்பாா் என எதிா்பாா்த்தோம். ஆனால், அவா் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக மட்டுமே தெரிவித்தாா். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிா்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காப்பீடு செய்தவா்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்பயிா் சேதமடைந்துள்ளதால், கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது என்றாா்.

அறிக்கை தயாராகிறது:

இது தொடா்பாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முருகானந்தம் கூறியது: ‘கானாா்பட்டி பகுதியில் பயிா் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருகிறது. ஆட்சியா் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.