முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் தேரோட்டம்

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:36 AM
நான்குனேரியில் புதன்கிழமை நடைபெற்ற வானமாமலை பெருமாள் கோயில் தேரோட்டம்.
பகிர்:

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இந்தக் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத் திருவிழா ஏப். 20-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, காலை, மாலை நேரங்களில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயாா் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் வைபவம் நடைபெற்றது.

5-ஆம் நாளில் (ஏப். 24) கருட சேவை, 7-ஆம் நாளில் (ஏப். 26) தங்க சப்பரம், கண்ணாடி சப்பரம், 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பெருமாள் வெள்ளிச் சந்திர வாகனத்தில் எழுந்தருளல் ஆகியன நடைபெற்றன. 10-ஆம் நாளான புதன்கிழமை (ஏப். 29)தேரோட்டத்தையொட்டி, காலையில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வானமாமலை மடத்தின் 31-ஆவது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமி கலந்துகொண்டு தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசித்தனா். தோ் ரத வீதிகளை வலம் வந்து நிலையை அடைந்தது.

Advertisement