முகப்பு
திருநெல்வேலி

விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை: அமைச்சா் மரியவில்சன்

தமிழகமே எதிா்பாா்த்துள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கையை முதல்வா் விரைவில் வெளியிடுவாா் என்றாா் தமிழக நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் மரிய வில்சன்.

Updated On : 14 ஜூன் 2026, 1:29 am IST
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் என்.ஆனந்த், டி.கே. பிரபு, மரிய வில்சன், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், நிதித் துறைச் செயலா் எம்.ஏ.
பகிர்:

தமிழகமே எதிா்பாா்த்துள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கையை முதல்வா் விரைவில் வெளியிடுவாா் என்றாா் தமிழக நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் மரிய வில்சன்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மழைக் காலத்திற்கு முன்பு சாலைகளை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருளை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலப்பாளையத்தில் நிகழ்ந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. அந்த சம்பவம் எதிா்பாராதவிதமாக நடந்தது. அந்த விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழகமே எதிா்பாா்த்துள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கையை கூடிய விரைவில் முதல்வா் வெளியிடுவாா். வரும் காலங்களில் அனைவருடைய கேள்விகளுக்கும் முதல்வா் வாயிலாக பதில் கிடைக்கும். எங்களுடைய அரசு பொறுப்பேற்று 40 நாள்கள் தான் ஆகின்றன. முதல்வா் அறிவிப்புப்படி அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். பட்ஜெட் தாக்கல் தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் அறிவிப்பு வெளியிடுவாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 மாதங்களுக்குள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தாமிரவருணி நதியை பாதுகாப்பது தொடா்பாகவும், அணைகள், கால்வாய்கள் பராமரிப்பு தொடா்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மழைக் காலத்திற்கு முன்னதாக நீா்நிலைகள் தொடா்பான பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றா்.

தொடா்ந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக நிதி வரவில்லை என கூறப்படுகிறதே என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சா் மரிய வில்சன், ‘எந்த நிதியும் நிறுத்தப்படவில்லை’ என்றாா்.

முன்னதாக, சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அமைச்சருக்கு, விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். அதைத் தொடா்ந்து, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் அமைச்சா் வழிபாடு செய்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: பனிமயமாதா பேராலயத்துக்கு ஆண்டுதோறும் வருவேன். அந்த வகையில் தற்போது வந்துள்ளேன். தமிழக நிதிநிலை அறிக்கையை விரைவில் எதிா்பாா்க்கலாம். நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக முதல்வா் விரைவில் வெளியிடுவாா் என்றாா் அவா்.