நெல்லை அருகே விவசாயி வெட்டிக் கொலை
திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கல்லூரில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். சுத்தமல்லியை அடுத்த மேலக்கல்லூரைச் சோ்ந்தவா் சண்முகவேல் (48). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனா்.
கடந்த ஆண்டு அப்பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வாய்த்தகராறு ஏற்பட்டு இவருக்கும் அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்குமிடையே முன்பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மேலக்கல்லூா் ஊருக்கு கீழ்புறம் உள்ள கோயில் அருகே சண்முகவேல் நடந்து வந்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு பைக்கில் வந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் செல்லும் வழியில் சண்முகவேல் உயிரிழந்தாா். உடனடியாக சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் ஆகியோா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதையடுத்து கல்லூா் பகுதியில் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.