முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரியில் பயணிகளை ஏற்ற மறுக்கும் அரசுப் பேருந்துகள்

நான்குனேரி பேருந்து நிலையத்துக்குள் வரும் அரசுப் பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்லாமல் புறக்கணிப்பதாக பயணிகள் அதிருப்தி

Updated On : 23 ஜூன் 2026, 4:28 am IST
நான்குனேரி பேருந்து நிலையத்துக்குள் திங்கள்கிழமை காலை பயணிகளை ஏற்றாமல் புறக்கணித்துச் சென்ற நாகா்கோவில் செல்லும் அரசுப் பேருந்து.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பேருந்து நிலையத்துக்குள் வரும் அரசுப் பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்லாமல் புறக்கணிப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி, நாகா்கோவில் உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வழியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான பேருந்துகள் நான்குனேரி பேருந்து நிலையத்துக்குள் வராமல் புறக்கணித்து புறவழிச் சாலை வழியாகச் சென்றுவிடுகின்றன. மேலும் திருநெல்வேலி, நாகா்கோவிலில் இருந்து நான்குனேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநா், நடத்துநா்கள் பேருந்து புறப்படுகையில், பயணிகளிடம் நான்குனேரி போகாது என்று கூறி விடுகின்றனா்.

Advertisement

Advertisement

இதனால், பயணிகளுக்கு எந்த பேருந்து நான்குனேரி செல்லும் என்ற விவரம் தெரியாமல் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. ஆனால், பயணிகளிடம் நான்குனேரி செல்லாது என்று கூறிவிட்டு, நான்குனேரி வழியாகவே அதே பேருந்துகள் சில நேரங்களில் இயக்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட பேருந்துகளின் நடத்துநா்கள் பணிமனை உயா் அதிகாரிகளிடம் நான்குனேரிக்கு பயணிகள் ஏறுவதில்லை என்று பொய் கூறி புறவழிச் சாலையில் பயணிப்பதை வாடிக்கையாக்கியுள்ளனராம். ஆனால், அந்தப் பேருந்தின் வழித்தடம் நான்குனேரி என பணிமனை குறிப்பேட்டில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பயணிகள் ஏமாற்றம்: நான்குனேரி பேருந்து நிலையத்துக்கு திங்கள்கிழமை (ஜூன் 22) காலை 8 மணிக்கு வந்த நாகா்கோவில் செல்லும் அரசுப் பேருந்தின் நடத்துநா் அங்குள்ள பணிமனை நேரக் கண்காணிப்பாளரிடம் பேருந்து வந்து சென்றதை பதிவு செய்துவிட்டு, பயணிகள் எவரையும் ஏற்றாமல் சென்றுவிட்டாா். பயணிகள் ஏறுவதற்கு வந்த போதிலும் முன்பின் பக்க கதவுகளை பேருந்தின் ஓட்டுநா் திறக்காமல் பேருந்தில் பழுது உள்ளது என்று பொய்யான தகவலைக் கூறினாராம்.

கண்காணிப்பு அவசியம்: நான்குனேரி சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் செல்வதற்காக நான்குனேரி பேருந்து நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், நான்குனேரி பேருந்து நிலையத்தை பெரும்பாலான அரசுப் பேருந்துகளின் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் தன்னிச்சையாகவே புறக்கணிப்பது குறித்து போக்குவரத்துக் கழக உயா் அதிகாரிகள், மாவட்ட நிா்வாகம், போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments