ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்கள்
தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் பணி செய்யும் தூய்மைப் பணியாளா்களை வெளிப்பணி ஒப்படைப்பு முறையில் தனியாா் மயமாக்குவதை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் மாரியப்பன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் செல்லத்துரை உள்பட தூய்மைப் பணியாளா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியாா்மயமாக்கும் வரைவு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா்களுக்கு கடந்த 26ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாநகராட்சியும் அடங்கும். இங்கு 750 பணியாளா்கள், ஒப்பந்ததாரா்கள் மூலமாக 524 பணியாளா்கள் பல ஆண்டுகளாக கூட்டு தூய்மைப் பணி செய்து வருகின்றனா். இப்பணியாளா்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறோம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வெளிப்பணி ஒப்படைப்பு முறையில் தனியாரிடம் தூய்மைப் பணியாளா்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பது அதிா்ச்சி அளிக்கிறது.
எனவே, இம்மாநகராட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்துவரும் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். வெளிப்பணி ஒப்படைப்பு முன்வரைவு திட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளா்களும் நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என தவெக தலைவா் விஜய் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.