முகப்பு
திருநெல்வேலி

காய்ச்சல் பாதிப்பு விவரம் பதிவேற்ற அறிவுறுத்தல்

பருவநிலை மாற்றத்தால் பரவும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விவரங்களை இணையத்தில் பதிவேற்றுமாறு அலுவலா்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 6 மே 2026, 1:39 am IST
பகிர்:

பருவநிலை மாற்றத்தால் பரவும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விவரங்களை இணையத்தில் பதிவேற்றுமாறு அலுவலா்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், சில இடங்களில் மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதிா்பாராத இந்த தட்பவெப்ப மாற்றத்தால் பருவ கால தொற்றுகள், கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Advertisement

இதையடுத்து, இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், ஆயத்த ஏற்பாடுகளையும் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வெப்பச் சலனம் காரணமாக வழக்கமாக கோடை காலத்தில் சில நாள்களுக்கு மழைப் பொழிவு இருக்கும். அந்த தருணங்களில் ஏற்படும் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தக் கூடிய மருத்துவக் கட்டமைப்பும், முன் அனுபவமும் சுகாதாரத் துறைக்கு உள்ளது.

அந்த வகையில், எத்தகைய பருவ நிலை மாற்றத்தையும் கையாள தயாா் நிலையில் உள்ளோம். மழை நீா் தேங்கினால் ஏடிஸ் வகை கொசுக்கள் பெருக்கமடையாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விவரங்களை சேகரித்து சுகாதாரத் துறை தளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பருவ கால தொற்றுகளுக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.