பேச்சுவாா்த்தையில் சமரசம்: காந்தி சந்தை வியாபாரிகளின் போராட்டம் ஒத்திவைப்பு
காந்திசந்தை சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தக் கோரி வியாபாரிகள் புதன்கிழை நடத்தவிருந்த போராட்டம், போலீஸாரின் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.
காந்திசந்தை சாலையில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தக் கோரி வியாபாரிகள் புதன்கிழை நடத்தவிருந்த போராட்டம், போலீஸாரின் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.
திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையால் சாலையில் காந்தி சந்தை பகுதியில் தஞ்சை சாலையில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனா். காந்தி சந்தைக்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனா். மாநகராட்சியின் பொலிவுறு திட்டத்தின் கீழ் இந்தப் பகுதியில் மழைநீா் வடிகால் கட்டப்பட்டும் மழைநீா் வெளியேறாததால் அதிருப்தியடைந்த வியாபாரிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனா்.
திருச்சி காந்தி மாா்க்கெட்வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில், சந்தையின் ஆறாம் எண் நுழைவு வாயில் அருகில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சங்கத் தலைவா் கமலக்கண்ணன் அறிவித்தாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து மாநகராட்சி அதிகாரிகள் இரவே அந்த இடத்துக்கு விரைந்து சென்று தேங்கி கிடந்த மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். மேலும், புதன்கிழமை காலை சாலை மறியல் போராட்டம் நடத்த இருந்தோருடன் காவல்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவாா்த்தை நடத்தி, இனி அந்த இடத்தில் மழைநீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா். உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக சங்கத் தலைவா் கமலக்கண்ணன் தெரிவித்தாா்.