முகப்பு
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்!

பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதத்தை தொடங்கினார் மாரியம்மன்.

Updated On : 8 மார்ச், 2026 at 4:23 AM
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா
பகிர்:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது.

சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோயிலின் ஈசான பாகத்தில் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டதால் இத்திருக்கோயிலும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் மூலவரைப் போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 இயந்திரங்களால் திருமேனி பிரதிஷ்டையில் இத்தலத்தில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பாகும். அம்மனின் சுயம்பு திருமேனியில் நவகிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரங்களை நவ சர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள் பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவகிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் இருக்கும் அம்மனை அமாவாசை, பெளர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபடுவது சிறப்பு.

மேலும் இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கும், மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரு ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறாள் என்பதற்கும் மேற்கூரையில் சிற்பச்சான்றுகள் உள்ளன. தட்சன் யாகத்திற்கு சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடிய போது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் இத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராண காலந்தொட்டே இருந்து வருகிறது. மிகத் தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் திருக்கண்கள் உள்ளன. இது இத்திருத்தலத்தின் புராண பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும்.

மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரமே ஆகும். எனவே தான் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள மகா மாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திரு உருவமாக விக்ரம சிம்மாசனத்தில், ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன், தங்கத் திருமுடியுடன், குங்கும நிறமேனியில் நெற்றியில் வைரப்பட்டை ஒளி வீச, வைரக்காதணி, வைரமூக்குத்தி சூரிய சந்திரனைப் போல் ஜொலித்து கண்களில் அருள் ஒலி பாலித்து, அன்னைக்கு அன்னையாய் ஆதி முதல் ஆதார சக்தியாய் நாடி வருவோருக்கு மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், மாதுளம் மேனியாய், மஞ்சள் உடை உடுத்தி, வாசனை மலர்களை திருமேனி முழுவதும் தரித்து காட்சியளிக்கிறாள். மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல செளபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இத்திருக்கோயிலின் தனிப்பெரும் சிறப்பாகும்.

இந்த 28 நாட்களும் திருக்கோயிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு பானகம் மற்றும் இளநீர்மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது.

இந்நிகழ்வில் பூச்சொரிதல் விழா அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் பூஜைகளுடன் காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா தொடங்கியது.

யானை மீது பூத்தட்டு வைக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் தேரோடும் வீதியில் ஊர்வலமாக வந்து பூக்களை சாட்டி வழிபட்டனர்.தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையர் எம்.சூரியநாராயணன், அறங்காவலர்கள் சுகந்தி இராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் 1,500 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பக்தர்களுக்காக குடிநீர் சுகாதார உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ச கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது.இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.

summary

Samayapuram Mariamman Temple. The flower-pouring ceremony has begun.

முழு கட்டுரையைப் படிக்க →