கல்லூரிகளில் கரும்பலகை மூலம் கற்பிக்கும் முறை மாற வேண்டும்
உயர் கல்வித் துறையில் கரும்பலகை மூலமான கற்பத்தில் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கற்பித்தல் முறையை முழுமையான அளவில் புகுத்த வேண்டும்....
உயர் கல்வித் துறையில் கரும்பலகை மூலமான கற்பத்தில் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கற்பித்தல் முறையை முழுமையான அளவில் புகுத்த வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) தொடங்கிய,"ஒய்' தலைமுறை மாணவர்களை கையாளும் நடைமுறைகள் என்ற தலைப்பிலான மூன்று நாள் சர்வதேச மாநாட்டில் அமைச்சர் பழனியப்பன் பேசியது:
தமிழகத்தை ஒரு கல்வி மையமாக மாற்ற தீர்மானித்து தீவிர முயற்சியை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், ஆசிரியர் பல்கலைக்கழகம் இதுபோன்ற மாநாட்டை நடத்துவது பாராட்டுக்குரியது.
Advertisement
இந்த மாநாட்டின் மையக் கருத்தாக எடுக்கப்பட்டுள்ள "ஒய்' தலைமுறை மாணவர்கள் என்பவர்கள், 1981-ஆம் ஆண்டு முதல் 1999-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களையே குறிப்பிடுகின்றது.
ஏனெனில், இந்தக் காலகட்டத்தில் உலகம் மிகப் பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் தொகை வளர்ச்சி, வேலைவாய்ப்பு சந்தையில் மாற்றம், பொருளாதார வளர்ச்சி என பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது.
இது, இந்தக் காலகட்டத்தில் பிறந்தவர்களிடையே, இந்த தொழில்நுட்ப வளர்ச்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையிலும் மிகப்பெரிய மாற்றத்தை இந்த தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், உயர் கல்வித் துறையில் இப்போதும் கரும்பலகை முறையிலான கற்பித்தல் முறை இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கற்பித்தல் முறை முழுமையான அளவில் புகுத்தப்பட வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டே, உயர் கல்வித் துறையை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் திட்டம், மொழி ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
உயர் கல்வித் துறை செயலர் அபூர்வ வர்மா பேசியது: தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் 3.40 லட்சம் மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1.40 லட்சம் பேர், பொறியியல் கல்லூரிகளில் 1.82 லட்சம் பேர், பல்கலைக்கழகங்களில் 70 ஆயிரம் பேர், தொலைதூரக் கல்வி நிறுவனங்களில் 6.60 லட்சம் பேர் என மொத்தம் 14 லட்சம் மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் "ஒய்' தலைமுறை மாணவர்கள். அதாவது, தொழில்நுட்ப வளர்ச்சியை நன்கு அறிந்தவர்களாகவும், அதைப் பயன்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
ஆனால், இவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் இந்த நவீன தொழில்நுட்ப அறிவை பெற்றவர்களாக இல்லை. 10 ஆசிரியர்களில் இருவர் மட்டுமே கம்ப்யூட்டர், இணையதளம், பிளாக் தொழில்நுட்பங்கள் மூலம் கற்பிக்கும் திறமையை பெற்றிருக்கின்றனர்.
மீதமுள்ள ஆசிரியர்களும் தங்களுடைய தொழில்நுட்ப அறிவை அவ்வப்போது வளர்த்துக்கொண்டே வரவேண்டும். அப்போதுதான் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும். பாரம்பரிய கற்பித்தல் முறையை, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வழங்கும் வித்தையை ஆசிரியர்கள் பெற்றிருப்பது அவசியம் என்றார்.
விழாவில் ஆசிரியர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன், பதிவாளர் விஸ்வலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய மாநாட்டு மலரை அமைச்சர் வெளியிட உயர் கல்வித் துறை செயலர் பெற்றுக்கொண்டார்.