முகப்பு
சென்னை

ரூ.3.6 கோடியில் கால்வாய்களைத் தூர் வாரும் பணிகள் தொடக்கம்

பருவமழைக் காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள கால்வாய்களைத் தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் புதன்கிழமை (செப்.11) தொடங்கப்பட்டன.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 3:53 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

பருவமழைக் காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள கால்வாய்களைத் தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் புதன்கிழமை (செப்.11) தொடங்கப்பட்டன.

பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பின் மூலம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 58 வகையான பணிகள் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. அக்டோபர் மாதம் முதல் வாரத்துக்குள் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்று பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூவம், அடையாறு, ஓட்டேரி, பக்கிங்ஹாம் கால்வாய், விருகம்பாக்கம் உள்ளிட்ட கால்வாய்களிலும், அதன் நீர்வழித்தடங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பருவமழைக் காலங்களில் சென்னை நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க முடியும்.

Advertisement

இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் உள்ள பிரதானக் கால்வாய்களில் திடக் கழிவு, தாவரக் கழிவுகள், கட்டட இடிபாடுகள், குப்பைகள் ஆகியவற்றைக் கொட்டுவதால் நீர் செல்லத் தடை ஏற்படுகிறது.

மேலும் நீர்வழித் தடங்களில் உருவாகும் மணல் திட்டுகள் காரணமாக, மழை நீர் செல்லாமல் தேங்கி நிற்கும். இதனால் தொற்றுநோய் உருவாகவும், மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் நகரின் நீர்வழித் தடங்களைத் தூர்வாரத் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் கூவம், அடையாறு உள்ளிட்ட நகரின் பிரதான கால்வாய்கள் மற்றும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, மாதவரம், கொரட்டூர், தணிகாசலம் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிறிய கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் நீர்வழித் தடங்களில் கழிவுகள், குப்பைகள், மணல் திட்டுகள், அடைப்புகள் ஆகியவற்றைத் தூர்வாரி, முட்டுக்காடு அருகே மழைநீரை கடலில் கலக்கச் செய்வதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.65.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூவம் ஆறு மற்றும் அதன் நீóர்வழித் தடங்களில் தூர்வார ரூ.42 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல கொரட்டூர், அடையாறு, தணிகாசலம் நகர், பாடிக்குப்பம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் தூர்வார தனித்தனியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.3.62 கோடியில் மொத்தமாக 58 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.