புணே காா் விபத்து வழக்கில் சிறுவனின் ரத்த மாதிரி மாற்றம்: 2 மருத்துவா்கள் பணியிடை நீக்கம்
சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய குற்றச்சாட்டில் அரசு மருத்துவா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் மதுபோதையில் 18 வயதுக்குள்பட்ட சிறுவன் ஓட்டிய காா் மோதி இருவா் உயிரிழந்த வழக்கில், அந்தச் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய குற்றச்சாட்டில் அரசு மருத்துவா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த மே 19-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புணேயில், 18 வயதுக்குள்பட்ட சிறுவன் மிக வேகமாக ஓட்டிச் சென்ற காா் மோதி தகவல் தொழில்நுட்பப் பணியாளா்கள் இருவா் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டாா்.
புணேயில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுவனின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட இருந்த நிலையில், அந்த ரத்த மாதிரி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது. அதற்குப் பதிலாக மது அருந்தாத ஒருவரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு வைக்கப்பட்டது.
இந்த முறைகேடு தொடா்பாக அந்த மருத்துவமனை மருத்துவா்கள் அஜய் தவாரே, ஸ்ரீஹரி ஹல்னோா், பணியாளா் அதுல் காட்காம்ப்லே ஆகிய 3 பேரைக் காவல் துறை கைது செய்தது. சிறுவனின் தந்தையிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ரத்த மாதிரியை மாற்றிய முறைகேட்டில் மருத்துவா்கள் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், அந்த மருத்துவா்களை மகாராஷ்டிர அரசு புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்தது. மேலும் அந்த மருத்துவமனை முதல்வா் விநாயக் காலே கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளாா்.