முகப்பு
புதுதில்லி

கல்விச் சுற்றுலாவுக்காக சொந்தமாக ரயில் வாங்கப்படும்: தில்லி பல்கலைக்கழகம்

கல்வி கற்கும் முறையை வகுப்பறைக்கு வெளியே எடுத்துச் செல்லும் முயற்சியாக, கல்விச் சுற்றுலாவுக்காக தில்லி பல்கலைக்கழகம் சார்பில்

Updated On : 2 மே 2013, 12:59 pm IST
பகிர்:

கல்வி கற்கும் முறையை வகுப்பறைக்கு வெளியே எடுத்துச் செல்லும் முயற்சியாக, கல்விச் சுற்றுலாவுக்காக தில்லி பல்கலைக்கழகம் சார்பில் சொந்தமாக ரயில் வாங்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் தினேஷ் சிங் கூறினார்.

""பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் "ஞானோதயா' என்ற பெயரில், ரயில் மூலமாக நாடெங்கும் கல்விச் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக ரயில்வேயிடம் வாடகைக்கு ரயில் எடுக்கப்படுகிறது. தற்போது, இதற்காக ரயிலை சொந்தமாக வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன'' என்று புதன்கிழமை நடைபெற்ற தில்லி பல்கலைக்கழக 91-ஆம் ஆண்டு நிறுவன நாள் விழாவில் துணைவேந்தர் தினேஷ் சிங் கூறினார்.

""இதற்காக மத்திய, மாநில அரசுகளிடம் நிதி உதவி கேட்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த ரயிலுக்கான நிதியை தில்லி அரசு வழங்கும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் உறுதி அளித்துள்ளார்'' என்றும் தினேஷ் சிங் குறிப்பிட்டார். 

முதல்வர் ஷீலா தீட்சித் பேசுகையில், ""பிற பல்கலைக்கழகங்களுடன் போட்டியிடுவதற்கும், கல்வி மேம்பாட்டுடன், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தவதற்கும் "ஞானோதயா ரயில்' போன்ற வித்தியாசமான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

தில்லி பல்கலைக்கழகம் தற்போது செயல்படுத்தும் திட்டங்களை வருங்காலத்தில் பிற பல்கலைக்கழகங்கள் செயல்படுத்தும்.

தில்லி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த நானும், எனது கணவரும் மேற்படிப்புக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றோம். அந்த பல்கலைக்கழகத்தையும்  தில்லி பல்கலைக்கழகம் போலவே உணர்ந்தேன்'' என்றார். பல்கலைக்கழக பதிவாளர் அல்கா சர்மா உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.