வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலையொட்டி வாக்களிக்க சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தேர்லுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏப்.23 ஆம் தேதி பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது.
இந்த நிலையில், தேர்தல் வாக்குப்பதிவுக்காக சொந்த ஊர் செல்வோருக்கு இடையூறு இன்றி பயணிக்க சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு விரைவு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Advertisement
இந்த சிறப்பு ரயில் (வண்டி எண்: 06072) நாளை (ஏப்.22) பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு, ஏப். 23 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்கும் நோக்கில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் இயக்கம் - முன்பதிவு இன்று (ஏப்.21) பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்குகிறது.
இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் வழியாகச் சென்று நாகர்கோயிலைச் சென்றடைகிறது.
தேர்தல் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகளைக் குறைக்க ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ அல்லது ரயில்வே கவுன்டர்களிலோ முன்கூட்டியே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யுமாறும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.