23.3.1976: கார்களின் விலை கணிசமாகக் குறைப்பு - அம்பாசிடர் - ரூ. 32,170!
கார்களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டது பற்றி...
புது டில்லி, மார்ச். 22 - கார் தயாரிப்பாளர்கள் புது கார்களின் விலையைக் கணிசமாகக் குறைத்துள்ளனர்.
டில்லியில் கார்களின் புது விலை வருமாறு: அம்பாசிடர் - ரூ. 32170; பியட் காரின் பிரீமியர் பத்மினி மாடல் - ரூ. 32,904; ஸ்டாண்டர்ட் காஸல் - ரூ. 25945.
இந்த விலையில் எக்ஸைஸ் தீர்வை மத்திய, மாநில விற்பனை வரிகள், விற்பனையாளர் கமிஷன், பதிவுக் கட்டணம் இன்ஜுரன்ஸ் கட்டணம் முதலியவை அடங்கும்.
டில்லியில் அம்பாசிடர் விலை ரூ. 36331 ஆகவும் பிரீமியர் பத்மினி கார் விலை ரூ. 36941 ஆகவும், ஸ்டாண்டர்ட் காஸல் கார் விலை ரூ. 36331 ஆகவும் இருந்தது.
கார் தயாரிப்பாளர்கள், கார்களுக்கு வேண்டிய உபரி பாகங்களைத் தயாரிப்பவர்கள், அரசு பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட உடன் பாட்டையடுத்து இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. கார்களுக்குத் தேவையான உபரி பாகங்களைத் தயாரிப்பவர்கள் இந்த பாகங்களின் விலையில் 10 சதவிகிதம் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
விற்பனையாளர்களின் கமிஷனும் கணிசமான அளவுக்குக் குறைக்கப்பட் டுள்ளது. 16 குதிரை வேக சக்தி வரையிலான கார்களுக்கு எக்ஸைஸ் தீர்வை 20 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என்று மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கார் தயாரிப்பாளர்களுக்கு சப்ளை செய்யப்படும் டயர்கள், டியூப்புகள், பாட்டரிகள் முதலியவற்றிற்கு விற்பனை வரி விதிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கார் தயாரிப்பாளர்கள் அடிப்படைச் செலவைக் கணிசமான அளவுக்குக் குறைத்துள்ளனர்.
சென்னையில் ஏழைகளுக்கு வீட்டு வசதி - குடிசை மாற்று வாரியத்தின் திட்டம்
சென்னை, மார்ச். 22 - ஆறு கோடியே எண்பது லட்சம் ரூபாய் செலவில் சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் கரை ஓரப்பகுதியில் ஏழை மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் பல அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டித்தர முடிவு செய்துள்ளது. வருகிற நிதி ஆண்டில் இந்த திட்டத்திற்காக அறுபது லட்சம் ரூபாய் செலவிடப்படும். இந்த திட்டத்தின் கீழ் உத்தேசமாக எட்டாயிரம் குடியிருப்புக்கள் கட்டித்தரப்படும். கால்வாயின் மத்தியப் பகுதியிலிருந்து 80 அடி தொலைவில் இருபுறமும் உள்ள குடிசைப் பகுதிகள் உடனடியாக அகற்றப்படும். இவர்களைக் குடி அமர்த்துவதற்காக மாற்று இடங்கள் 15 தேர்ந்தெடுக்கப்பட்டு குடியமர்த்தப்படுவார்கள். முதல் கட்ட வேலை தென் சென்னையில் துவக்கப்படும். பக்கிங்ஹாம் கால்வாயின் கரையோரமாக அரசாங்க பொதுப் பணித்துறைக்கும் சென்னை மாநகராட்சிக்கும் சொந்தமாக உள்ள நிலங்களில் முதலாவதாக கட்டுமானப் பணி துவங்கும். இரண்டாவது கட்டமாக தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பின்னர் அங்கு கட்டிட வேலைகள் துவங்கும்.
மேற்கண்ட தகவலை தமிழ் நாடு வீட்டுவசதி, குடிசை மாற்று வாரியங்களின் தலைவரும் வீட்டு வசதித்துறை தனிச் செயலாளருமான கே.வி. ராமநாதன் நிருபரிடம் தெரிவித்தார். தமிழ் நாட்டில் புதிய நிர்வாகம் அமைந்த பிறகு குடிசை மாற்று வாரியப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற புகாரை அவர் மறுத்தார். மாறாக இப்போது அப்பணிகள் முறையாகவும் தீவிரமாகவும் நடைபெறுகிறது என்று ராமனாதன் கூறினார்.