குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!
குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும் என 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் பரிந்துரைகள் குறித்து...
மதுரை: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை மறுசீரமைக்க 8-ஆவது ஊதியக் குழு அமைத்துள்ள நிலையில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் பரிந்துரைத்துள்ளது
மதுரையில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள், மாநில மத்திய சங்கத்துடன் இணைந்த அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் ஓய்வூதியர்கள் சம்மேளனம், 8 -ஆவது ஊதியக் குழுவிற்கான மாநில செயற்குழுக் கூட்டம் மதுரை, மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சங்க கூட்ட அரங்கில் அகில இந்திய தலைவர் முனைவர் கே.கணேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராமச்சத்திரன், மாவட்ட தலைவர் தங்கராஜ், செயலாளர் கே.மகேந்திர சாமி, மாயாண்டிபாரதி, திருப்பதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
கூட்டத்துக்கு பின்னர் அகில இந்திய தலைவர் முனைவர் கணேசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மத்திய அரசின் 8-ஆவது ஊதியக் குழு சார்பில் கேட்கப்பட்ட 18 கேள்விகளுக்கு பதில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 8-ஆவது ஊதியக் குழு விலைவாசி உயர்வுக்கேற்ப தற்போது ரூ.18,000 ஆக உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 69 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என பரிந்துரைக்கபட்டுள்ளது.
மேலும், தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மே 22- ஆம் தேதி அனைத்து மாநிலத்தில் பணியாற்றும் "டி" பிரிவு பணியாளர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றுவார்கள். தொடர்ந்து ஜூன் 7 ஆம் தேதி புதுதில்லி ஜந்தர் மந்தரில் மாநில அரசுகளையும், மத்திய அரசையும் கண்டித்து மாபெரும் கோரிக்கை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறினார்.
கடந்த கால ஊதியக் குழுக்களின் வரலாற்றை பார்த்தால், ஊழியர் சங்கங்கள் பரிந்துரைக்கும் தொகையைவிட மத்திய அரசு இறுதி செய்யும் தொகை குறைவாகவே இருக்கும். அதாவது, கடந்த 7 -ஆவது ஊதியக் குழுவில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 கோரப்பட்ட நிலையில், ரூ.18,000 மட்டும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
எனவே, இந்த முறை குறைந்தபட்ச ஊதியம் ரூ.54,000 முதல் ரூ.58,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அரசின் நிதிப்பற்றாக்குறை மற்றும் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டே இறுதி முடிவு இருக்கும்.