திருக்கோயில்கள் திருவிழாக்கள் (சில சுவையான தகவல்கள்)
திருக்கோயில்கள் திருவிழாக்கள் (சில சுவையான தகவல்கள்)- கைலாசம் சுப்ரமணியம்; பக்.480; ரூ.300; வானதி பதிப்பகம், சென்னை -17; )044 - 2434 2810.
திருக்கோயில்கள் திருவிழாக்கள் (சில சுவையான தகவல்கள்)- கைலாசம் சுப்ரமணியம்; பக்.480; ரூ.300; வானதி பதிப்பகம், சென்னை -17; )044 - 2434 2810.
ஆலயங்கள் அனைத்தும் கலை, கலாசாரம் இவற்றின் உறைவிடமாகத் திகழ்வதை இந்நூல் எடுத்தியம்புகிறது. ஆலயங்களில் கலைகள், நூல்களின் அரங்கேற்றம் நடைபெறுதல், கோயில்கள் கட்டுதல், கோபுரம் அமைத்தல், தெய்வங்கள் மூலவர், உற்சவர் திருமேனிகள் செய்தல், தெய்வத்திற்கு ஆபரணங்கள் செய்தல், வாகனங்கள், தேர், சிற்பங்கள் செய்தல் என எல்லாக் கலைகளுமே ஆலயத்தை மையமாகக் கொண்டு வளர்ந்து வருவதை விளக்குகிறது. சைவ ஆகமங்கள், வைணவ ஆகமங்கள் கொடியேற்றம் (துவஜாரோஹணம்), கொடியிறக்கம் (துவஜஅவரோஹணம்), துவஜஸ்தம்பத்தின் விளக்கம், திருவிழாக்கள் நடத்தப்படுவதின்
ஐதீகம், ஆலய வரலாறு, சிதம்பர ரகசியம் போன்ற விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
"தோடுடைய செவியன்..' என்று பாடிய திருஞானசம்பந்தர் பெருமானுக்கு சீர்காழி, சட்டநாதர் திருக்கோயிலில் நடத்தப்படும் சித்திரை மாத பிரம்மோற்சவத்தில் இரண்டாம் நாள் நடைபெறும் திருமுலைப்பால் உற்சவம், நாவுக்கரசருக்கு திருவதிகையில் சூலைநோய் அளித்து மீட்ட விழா, சிவபெருமானின் அன்புக்குப் பாத்திரரான சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட விழா, நெல் அட்டிச் செல்லும் விழா (நெல் மகோத்சவம்), குருகாவூரில் இறைவன் கட்டமுது அளிக்கும் விழா, திருவொற்றியூரில் மகிழடி சேவை, பேரூர் பட்டீஸ்வரத்தில் நாற்று நடும் விழா, அவினாசியில் முதலை வாய்ப்பிள்ளை உற்சவம், திருக்கயிலை சேரும் விழா என்று தொடர்ந்து, நீள் பயணமாய் விரிகிறது இந்நூல். ஆன்மிக அன்பர்களுக்கு நல்விருந்து.