சான்றோர்...பாலர்
தாமரை, ஜனசக்தி , சர்வோதயம், தினமணி உள்ளிட்டவற்றில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது இந்நூல்.
சான்றோர்...பாலர்-பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன்; பக். 228; ரு. 260; கேலக்ஸி புக் செல்லர்ஸ் அண்ட் பப்ளிஷர்ஸ், மேலூர்-624 106, ✆ 99944 34432.
மகாகவி பாரதியார் குறித்து வ.உ.சி., 'சோழனும் கம்பனுமாக இருந்த நாங்கள் பேசிப் பேசி மாமனும், மருமகனுமாக ஆகிப் போனோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார் என்பதை வாசிக்கும்போது நம்மால் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை. ஸ்ரீமான் வைத்தியநாத ஐயர் இறந்தபோது தன் தலைமுடியை மழித்து அவரைத் தந்தையாக்கி கடமையாற்றிய கக்கனும், பண்டித ஜவாஹர்லால் நேரு மறைந்தபோது 'ஆசிய ஜோதியை இழந்து விட்டோமே' என கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட இரு காம்ரேட்டுகளும் என வரலாற்றில் கண்ணியம் காக்கப்பட்ட நிகழ்வுகளுமாக இந்த நூல் விரிந்து இருக்கிறது.
தாமரை, ஜனசக்தி , சர்வோதயம், தினமணி உள்ளிட்டவற்றில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது இந்நூல்.
Advertisement
சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என தமிழ் இலக்கியத்தில் தனது பரந்து விரிந்த அனுபவத்தைப் பதிவிட்டிருக்கும் நூலாசிரியர், நாம் அறிந்த சான்றோர் குறித்த அறியாத உயர் பண்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.
காந்தியமும்-மார்க்சியமும் ஒன்றிணைந்த சன்மார்க்கமாக இந்தியா இருக்க வேண்டும் என்று திரு.வி.க. விரும்பியதைப் பதிவு செய்யும்போது, நம் தேசம் இழந்த அந்த மாமனிதரின் இன்னொரு முகம் நமக்குத் தெரிய வருகிறது.
பாரத புண்ணிய பூமியில் பிறந்த 'சான்றோர்கள்' குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தரவுகளை 31 கட்டுரைகளாக தொகுக்கப்பட நூலாசிரியரை ஆற்றுப்படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.