சங்கரன்கோவில் ஆடிதவசு திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடிதவசுத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடிதவசுத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இத்திருவிழா 12 நாள் நடைபெறும். இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோமதி அம்பாள் சன்னதி முன்னுள்ள கொடிமரத்தில் காலை 7.35 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடிப்பட்டம் ஏற்றப்படுகிறது.
பின்னர், கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளுகிறார். அப்போது சிறப்புத் தீபாராதனை நடைபெறும். இரவு 10 மணிக்கு மண்டகப்படியில் வீற்றிருக்கும் அம்பாள் தங்கச் சப்பரத்தில் வீதியுலா வருதல் நடைபெறும்.
Advertisement
தொடர்ந்து, கோவில் அபிஷேக மண்டபத்தில் சிறப்பு நாகசுரம், தேவார இன்னிசை, சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகின்றன. 2-ஆம் திருநாளான சனிக்கிழமை காலை சிவலிங்க தரிசனம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு அம்பாள் வெள்ளிக் காமதேனு வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெறும்.
இரவு கோவில் அபிஷேக மண்டபத்தில் சிறப்பு நாகசுரம், சொற்பொழிவு, பக்தி இன்னிசை நடைபெறும். ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ம. அன்புமணி, துணை ஆணையர் இரா. பொன்சுவாமிநாதன், மண்டகப்படிதாரர்கள் செய்துவருகின்றனர்.
கண்காணிப்பு கேமராக்கள்: சங்கரநாராயணசுவாமி கோவிலில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. தற்போது ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி 32 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.