கடிவாளம் இல்லாத இந்த மனக் குதிரையை அடக்குவது எப்படி?
"வைராக்கியத்தால் முடியும்" என்கிறது கீதை. அதையே சொல்கிறார் பகவான் ராமகிஷ்ணர்.
அது என்ன வைராக்கியம்...?
உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது எந்த நிகழ்ச்சிகளுக்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பது. மெழுகு போல் இருக்கும் மனதை மரக்கட்டை போல் ஆக்கவிடுவது. ஆசாபாசங்களிலிருந்து மனதை மட்டும் ஒதுக்கி வைத்து விடுவது. பந்த பாசங்களில் இணங்கிவிடாமல் இருப்பது. பற்றறுப்பது, சுற்றுச் சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.
Advertisement
Advertisement
நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்ற முடிவுக்கு வருவது. ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப் பம்பரம்போல் ஆட்டிவைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டுகொள்வது. துன்பத்தைத் தரக்கூடிய விஷயங்களை அலட்சியப்படுத்துவது. இன்பமான விஷயங்களைச் சந்தேகமில்லாமல் ஏற்றுக் கொள்வது.
பிறர் தனக்கிழைத்த துன்பங்களை மறந்துவிடுவது, மன்னித்துவிடுவது. முயற்சிகள் தோல்வியுறும்போது, இதற்கு இறைவன் சம்மதிக்கவில்லை. என்று ஆறுதல் கொள்வது.
கணநேர இன்பங்களை அவை கண நேர இன்பங்களே என்று முன் கூட்டியே கண்டு கொள்வது. ஆத்மா என்னும் மாயப்புறா அமரும் மாடங்களெல்லாம் நம்முடைய மாடங்களே" என்ற சமநோக்கத்தோடு பார்வையைச் செலுத்துவது.
காலையில் இருந்து மாலை வரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குதான் என்று அமைதி கொள்வது.
சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது. ஆனால் எப்படி இது முடியும்?
"பகவத் தியானத்தால் இவை அனைத்தும் சாத்தியமாகும்"
"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"
"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
- கோவை பாலகிருஷ்ணன்