முகப்பு
செய்திகள்

குருப் பெயர்ச்சி பலன்கள் 2022: தனுசு

தனுசு ராசிக்கு 2022-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.

Updated On : 11 ஏப்ரல் 2022, 11:48 am IST
பகிர்:

தனுசு ராசிக்கு 2022-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தனுசு ராசி அன்பர்களே நீங்கள் தேவ குரு என்று அழைக்கப்படும் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள். நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களைச் செய்ய மாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்குக் கொடுத்துக் கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர். தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றும் திறன் உடையவர்கள். தெய்வ நம்பிக்கை அதிகமாக இருப்பவர்கள். 

Advertisement

Advertisement

13-04-2022 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை அஷ்டம  - தொழில்  - அயன சயன போக  ஸ்தானங்களின் மீது விழுகிறது.

இந்த குருப் பெயர்ச்சியில் பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாகக் கிடைக்கும். புத்திரர்கள் தவறான பழக்கவழக்கம் உள்ள நபர்களுடன் சேர்த்து சிரமப்படும் வாய்ப்புகள் உள்ளதால் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் சிலரது குறுக்கீடுகளால் மனக்கசப்புகள் தோன்றி, பின்னர் படிப்படியாக நிலைமை சீராகும். ஆயுள் ஆரோக்கியம் பலம் பெற கிரக அனுகூலம் நன்றாக உள்ளது. உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வதிலும் உதவிகள் செய்வதிலும் இருந்த தடைகள் அகலும். செய்யும் வேலைகளில் மனநிறைவு நிறைந்து காணப்படும். பணியிட மாற்றம் உறுதிப்படுத்தப்படுகிறது. 

இந்த ஆண்டு நீண்ட நாட்களாக இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால்  இருந்த பிரச்சினைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எங்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள். நீங்கள் நன்மைக்காகப் போராட தயங்காதவர். மனக்கலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாகச் செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்துச் செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்க்கலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.

தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும்.  தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.  கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். அன்பு அதிகரிக்கும். மருத்துவச் செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.

பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.  உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். 

கலைத்துறையினர் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. 

அரசியலில் உள்ளவர்களுக்கு வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தொண்டர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது நன்மை தரும். எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். 

மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும். 

மூலம்

இந்த ஆண்டு எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும். நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது.  வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். 

பூராடம்

இந்த ஆண்டு பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்

இந்த ஆண்டு வீண் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. 

பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.  

சிறப்பான கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்

அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீகுருப்யோ நம என்ற மந்திரத்தை தினமும் 16 முறை சொல்லவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.