முகப்பு
செய்திகள்

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

மார்கழி மாதத்தின் சிறப்புகளில் ஒன்றாக திருப்பதியில் அதிகாலையில் சுப்ரபாதம் இசைக்கப்படாது என்பதும் இடம்பெற்றுள்ளது.

Updated On : 17 டிசம்பர் 2025, 7:00 am IST
திருமலை - file photo
பகிர்:

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப் புகழ்பெற்றது. இந்தக் கோயிலில் நாள்தோறும் காலை சுப்ரபாத சேவை நடைபெறுவது காலங்காலமாக நடைபெறும் வழக்கம். ஆனால், இந்த மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதம் இசைப்பதில்லை.

அதற்கு மாறாக, ஸ்ரீஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்கள் ஒவ்வொரு பாடலாக நாள்தோறும் காலை இசைக்கப்படுகிறது.

சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளை சிறப்பிக்கும் வகையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலில் மார்கழி மாதத்தில் மட்டும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் இசைக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மார்கழியில், ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களைக் கேட்டுத்தான் ஏழுமலையான் துயில் எழுவதாக ஐதீகம். அது மட்டுமல்ல, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், மார்கழி மாதத்துக்கு என தனி வழிபாட்டு அட்டவணைகள் உள்ளன. அதிகாலை திருப்பாவையுடன் தொடங்கும் இந்த மாற்றம், இரவு ஏகாந்த சேவை வரை தொடர்கிறது. இடையே இறைவனுக்குப் படைக்கப்படும் பிரசாதம் முதல் ஒவ்வொரு கால பூஜைகளிலும் மார்கழி மாதத்தின் சிறப்புகள் வந்து சேர்ந்துகொள்வது வெகுசிறப்பு.

அது மட்டுமா, கோயிலில் நடைபெறும் அலங்காரங்களின்போது, ஆண்டாளின் சிறப்பான கிளிகளும் இடம்பெறுமாம்.

ஆழ்வார்களில், ஆண்டாள் மட்டுமே பூமாதேவியின் அம்சம் என்று சிறப்பிக்கப்படுபவர். ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களில், தன்னை தலைவியாகவும், இறைவனை தலைவனாகவும் பாவித்துப் பாடிய பாசுரங்களுக்கு என்றுமே தனிச்சிறப்புதான்.

பெருமாளுக்கு அணிவிக்க பெரியாழ்வாரால் தொடுக்கப்பட்ட மாலைகளை, அவருக்குத் தெரியாமல், ஆண்டாள் சூடிப்பார்த்து அழகு பார்த்ததால்தான் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்ற பெயரை பெற்றார்.

இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில்தான் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமியில், அழகிய மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு பிறகு கள்ளழகருக்கு சாற்றப்படுகிறது. அதுபோல, புரட்டாசி பிரம்மோற்சவத்தின்போதும் வெங்கடேச பெருமாளுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கொண்டு செல்லப்பட்டு அணிவித்து அழகுபார்க்கப்படுகிறது.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த மார்கழி மாதம் முழுக்க விரதங்கள் இருந்து, இறை வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே, தனி நபர்களின் மங்கல நிகழ்ச்சிகள் கூட நடைபெறுவதில்லை. அத்தனை சிறப்பு வாய்ந்தது இந்த மார்கழி மாதம் என்பதால் பக்தர்களும் இறையருளைப் பெற வேண்டுவோம்.

summary

One of the special features of the month of Margazhi is that the early morning Suprabhatam chanting in Tirupati will not be performed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments