பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!
லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் பற்றி..
நரசிம்மர் ஜெயந்தியையொட்டி, விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பத்திலுள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் வியாழக்கிழமை விசேஷ திருமஞ்சனம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகிலுள்ள பூவரசன் குப்பத்தில் அருள்மிகு அமிர்தவல்லி நாயகி உடனுறை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சப்த ரிஷிகளுக்காக அமிர்தவல்லித் தாயாருடன் சாந்த சொரூபியாக நரசிம்மர் காட்சியளித்த இக்கோயில் தென் அஹோபிலம் என்றும் அழைக்கப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் நரசிம்மர் ஜெயந்தியன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டில் நரசிம்மர் ஜெயந்தியான வியாழக்கிழமை (ஏப்ரல் 30) காலை7 மணி முதல் 8 மணி வரை மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம், காலை 8 மணிக்கு மூலவருக்குத் தங்கக்கவசம் சாற்றப்பட்டு ஆரத்தி நடைபெற்றது.
Advertisement
இதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல் சுமார் ஒரு டன் அளவுள்ள மதுரை மல்லி, ஓசூர் செவ்வந்தி, ஸ்ரீரங்கம் விருச்சிப்பூ, தஞ்சாவூர் தவளம் உள்ளிட்ட பூக்களைக் கொண்ட பூக்கூடைகளைப் பக்தர்கள் ஊர்வலமாகக் கொண்டு வந்து முற்பகல் 11:30 மணிக்கு லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு புஷ்பயாகம் நடத்தப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு சாற்றுமுறை முடிந்தவுடன் பக்தர்களுக்குப் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சுவாதி நட்சத்திர தினமான மே 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணி வரை மூலவருக்குத் திருமஞ்சனமும், காலை 9 மணிக்கு மேல் சுவாதி ஹோமமும் தொடங்கி நடைபெறும். பிற்பகல் 12.30 மணிக்கு பூர்ணாஹூதியும், பிற்பகல் 1 மணிக்கு ஆரத்தி வழிபாடும் நடைபெறும்.