ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும், தமிழும் (முதற் பகுதி)
ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும், தமிழும் (முதற் பகுதி) - க.ஜெயபாலன்; பக். 352; ரூ.420; அறம் பதிப்பகம், ஆரணி-632 316; 91507 24997.
முகநூலில் எழுதப்பட்ட 175 கட்டுரைகளில் சிறந்த 100 கட்டுரைகளைத் தேர்வு செய்து நூலாக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
கலை, இலக்கியம், மொழி, பண்பாடு, தத்துவம், சிற்பவியல், கட்டடவியல், கல்வெட்டுகள், மருத்துவம், ஊர்ப் பெயராய்வு, திராவிடம், வழிபாட்டு நெறிகள் , ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் முதலிய பௌத்தம் தொடர்பான ஆய்வுகள், ஆளுமைகள், பண்டைக்கால அரசியல், வாழ்வியல், அயலக இலக்கியம் என வெவ்வேறு காலகட்டங்களில் உள்ளடக்கிய தாக்கங்கள் என பல தளங்களில் ஒப்புநோக்கு நிலையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன்மூலம் தமிழ், பௌத்தப் பண்பாடுகளுக்குள்ள ஒற்றுமை கூறப்பட்டுள்ளது. பௌத்தத்தின் 10 வகை நிறைவுடைமைகளில் முதலாவதாகக் கருதப்படுவது தானம், விருந்தோம்பல். விருந்தினர் காத்திருக்க சாவா மருந்தாக இருந்தாலும் எடுத்துகொள்ள மாட்டார்கள் தமிழர்கள் என்பது வள்ளுவ மரபு. அதுவேதான் பௌத்தத்திலும் என்கிறார் நூலாசிரியர். இதேபோல், பௌர்ணமி வழிபாடு முழுமையின் அடையாளமாகவே பௌத்தத்திலும் தமிழ் மரபிலும் கொண்டாடப்படுகிறது.
சக்கரங்கள்- பயணங்கள் போன்றவை இரு மரபுக்கும் ஒன்றாக உள்ளது. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பது தமிழ் மரபு. (உ.ம்.)
கண்ணகி, மணிமேகலை, இறையடிகளார்கள் தொண்டர்கள். அதுவே பௌத்தத்திலும் போற்றப்படுகிறது. உடல் முழுவதும் உற்றுக் கவனிக்கிற 'காயானுபாசான' என்பது ஒவ்வொரு உறுப்பையும் கூர்ந்து கவனித்தல் ஆகும். இதை 'இறைவன் காக்க' என்கிற கந்த சஷ்டி கவசத்தோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர். நூறு கட்டுரைகளும் நூறு தனித்தனி நூல்களாக விரிவு செய்கிற தலைப்புகள் கொண்டதாகவே உள்ளன.