ஜூலையில் ஐஓஏ சிறப்பு பொதுக்குழு கூட்டம்
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 அல்லது 12-ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 அல்லது 12-ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது.
இக்கூட்டத்தின்போது ஐஓஏவின் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
ஐஓஏ தேர்தலில் விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி கடந்த டிசம்பரில் ஐஓஏவை சஸ்பெண்ட் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி).
Advertisement
இதைத் தொடர்ந்து ஐஓஏ மீதான சஸ்பெண்டை நீக்கும் முயற்சியாக கடந்த மாதம் ஐஓசி கூட்டுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஜூலை 15-ம் தேதிக்குள் ஐஓஏ விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வருமாறும், செப்டம்பர் 1-க்குள் மறுதேர்தலை நடத்துமாறும் ஐஓசி உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து இப்போது ஐஓசி சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 அல்லது 12-ம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக ஐஓஏ நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஐஓசியின் பிரதிநிதிகள் ஜூலை 11-ம் தேதி இந்தியா வருகின்றனர். அதேநாளிலோ அல்லது அடுத்த நாளிலோ ஐஓசி பொதுக்குழு கூட்டப்படும்' என்றார்.
இதுபோன்ற முக்கியமான சிறப்பு பொதுக்குழுவை கூட்ட 15 நாள்களுக்கு முன்னதாகவே நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும்.
அதனால் அடுத்த சில நாள்களில் பொதுக்குழு தொடர்பான அறிவிப்பை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒலிம்பிக் சங்க தலைவர் அபய் சிங் செளதாலா வெளியிடுவார் என்று ஐஓஏ வட்டாரங்கள் தெரிவித்தன.