முகப்பு
விளையாட்டு

செப்டம்பர் 29-ல் பிசிசிஐயின் ஆண்டு பொதுக்கூட்டம்

பரபரப்பான சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை கூடியது. இதில், பிசிசிஐயின் ஆண்டு பொதுக்கூட்டத்தை சென்னையில் வரும் 29-ம் தேதி நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 12:47 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

பரபரப்பான சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை கூடியது. இதில், பிசிசிஐயின் ஆண்டு பொதுக்கூட்டத்தை சென்னையில் வரும் 29-ம் தேதி நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

கொல்கத்தாவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்துக்கு பிசிசிஐயின் தலைவர் பதவியிலிருந்து தாற்காலிகமாக விலகியுள்ள சீனிவாசன் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்ட ரீதியான பிரச்னையைத் தவிர்க்க அவர் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கவில்லை. பிசிசிஐயின் இடைக்காலத் தலைவராக உள்ள ஜக்மோகன் டால்மியா இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் என்ற அடிப்படையில் பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்றார். பிசிசிஐயின் கணக்குவழக்கு தொடர்பாக விவாதிக்கும்போது சீனிவாசனே தலைமை வகித்தார். சென்னையில் நடைபெறவுள்ள பிசிசிஐயின் ஆண்டு பொதுக்கூட்டம் வரை பிசிசிஐ தலைவராக டால்மியாவே தொடர்வார் என்று செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

Advertisement

"ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறும், பிசிசிஐ விதிமுறைகளின்படி தனது கடமைகûளைச் செய்யுமாறும் சீனிவாசனிடம் தெரிவிக்கப்பட்டது என்று பிசிசிஐ செயலாளர் சஞ்சய் படேல் தெரிவித்தார். சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி வரும் 17-ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இத்தொடரில் சூதாட்டத்தை தவிர்ப்பது குறித்து டால்மியா 5 விதிகளைத் தெரிவித்திருந்தார். இந்த விதிகள் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முன்னதாக, ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரணைக் குழு அளித்த அறிக்கையில், சீனிவாசன், குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டவர்களுக்கு நற்சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விசாரணைக் குழு பிசிசிஐயின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், பிசிசிஐயின் தலைவர் பதவிக்கு மீண்டும் வருவதில் சீனிவாசனுக்கு சிக்கல் ஏற்பட்டது.

மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து சீனிவாசன் மற்றும் பிசிசிஐ-க்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் சீனிவாசன் தலைமை தாங்கினால், அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும் என்று பிசிசிஐயின் சட்ட வல்லுநர்கள் குழு அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்தே அவர், இக்கூட்டத்துக்கு தலைமையேற்கவில்லை.

ஆனால், சென்னையில் நடைபெறவுள்ள பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டத்துக்கு தலைமை ஏற்பேன் என்று சீனிவாசன் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.