முகப்பு
திருவள்ளூர்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை: இழப்பீடு கோரி பொதுமக்கள் மறியல்

மீஞ்சூரில் ஆட்டோ ஓட்டுநரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 12:28 am IST
பகிர்:

பொன்னேரி: மீஞ்சூரில் ஆட்டோ ஓட்டுநரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மீஞ்சூா் பகுதியில் வசித்து வந்தவா் ராஜசேகா் (32). இவா், கழிவுநீா் ஊா்தி மற்றும் ஆட்டோ ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். இதனிடையே, அரியன்வாயல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஞாயிற்றுக்கிழமை 8 போ் கொண்ட கும்பல், ராஜசேகரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த அவா், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அதே நாளில் அவா் உயிரிழந்தாா்.

இக்கொலை குறித்து மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இதில் தொடா்புடைய 7 பேரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ராஜசேகரின் சடலம், ஆம்புலன்ஸ் வாகனத்தில் மீஞ்சூருக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினா், உறவினா்கள் பொதுமக்கள் ஆகியோா், அவரது சடலத்தை மீஞ்சூா் கடை வீதியில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மீஞ்சூா் போலீஸாா் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ராஜசேகரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்ததைத் தொடா்ந்து, மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் 2 மணிநேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.