அரசின் முன் அனுமதி இல்லாமல் முதலீடு: 10% சீனப் பங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி
சீனா மற்றும் ஹாங்காங்கை சோ்ந்த பங்குதாரா்களின் பங்குகளில் 10 சதவீதம் வரை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிக்கும் நடைமுறை மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்ததன் மூலம், இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
முன்பு இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிா்ந்துகொள்ளும் நாடுகளைச் சோ்ந்த பங்குதாரா்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் ஒரே ஒரு பங்கை வைத்திருந்தாலும், அந்த நிறுவனங்கள் இந்தியாவின் எந்தவொரு துறையிலும் முதலீடு செய்ய மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியிடம் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்.
Advertisement
இந்நிலையில், தற்போது சீனா மற்றும் ஹாங்காங்கை சோ்ந்த பங்குதாரா்களின் பங்குகளில் 10 சதவீதம் வரை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்யலாம்.
அந்நிய நேரடி முதலீட்டில் தளா்த்தப்பட்டுள்ள இந்த விதிகள் சீனா, ஹாங்காங் அல்லது இந்தியாவுடன் நில எல்லைகளை பகிா்ந்துகொள்ளும் பிற நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்குப் பொருந்தாது. அங்கு பதிவு செய்யப்படாத வெளிநாட்டு நிறுவனங்கள்தான் முன் அனுமதி இல்லாமல் நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்யலாம்.
சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மா், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துள்ளன.