அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த நம்பிக்கையால் சென்செக்ஸ் 941 புள்ளிகளும், நிஃப்டி 298 புள்ளிகள் உயர்வு!
சென்செக்ஸ் 940.73 புள்ளிகள் உயர்ந்து 77,958.52 புள்ளிகளாகவும், நிஃப்டி 298.15 புள்ளிகள் உயர்ந்து 24,330.95 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததையடுத்து, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை மீண்டெழுந்தன. இதனையடுத்து, நிஃப்டி குறியீடு 24,300 புள்ளிகளுக்கு மேல் சென்று வர்த்தகத்தை நிறைவு செய்தது.
வர்த்தக அமர்வில், பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் அவ்வப்போது லாபப் பதிவு மேற்கொண்டனர். இருப்பினும், வர்த்தகத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில் ஏற்பட்ட தொடர் வாங்குதல் உள்ளிட்டவையால் பங்குச் சந்தையின் மீதான ஆர்வம் கணிசமாக அதிகரித்தது.
வர்த்த முடிவில், சென்செக்ஸ் 940.73 புள்ளிகள் உயர்ந்து 77,958.52 புள்ளிகளாகவும், நிஃப்டி 298.15 புள்ளிகள் உயர்ந்து 24,330.95 புள்ளிகளாக நிலைபெற்றது.
Advertisement
இந்திய ரூபாய், பொறுத்தவரை, முந்தைய வர்த்தக அமர்வில் டாலருக்கு ஒன்றுக்கு ரூ. 95.43 என்ற புதிய குறைந்தபட்ச நிலையை எட்டியிருந்த நிலையில், பிறகான வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு வலுவான மீட்சியைக் கண்டது. முந்தைய நாள் நிறைவு விலையான ரூ. 95.29ஐ ஒப்பிடுகையில், இன்று 68 காசுகள் உயர்ந்து ரூ. 94.61 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு பெற்றது.
சென்செக்ஸில் இன்டர்குளோப் ஏவியேஷன், மஹிந்திரா & மஹிந்திரா, ட்ரெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் லார்சன் & டூப்ரோ, ஹிந்துஸ்தான் யூனிலீவர், என்டிபிசி மற்றும் பவர் கிரிட் ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் இன்டர்குளோப் ஏவியேஷன், ட்ரென்ட், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ஓஎன்ஜிசி, எல்&டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட் கார்ப் மற்றும் என்டிபிசி ஆகிய பங்குகள் சரிந்தன.
மின்சாரம், நுகர்வோர் பொருட்கள் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளைத் தவிர, மற்ற அனைத்துத் துறைசார் குறியீடுகளும் உயர்ந்த நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. குறிப்பாக, ஆட்டோமொபைல், ஊடகம், தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட், உலோகம் மற்றும் மருந்துத் துறை சார்ந்த குறியீடுகள் தலா 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன.
பங்குகளை பொறுத்தவரை, 4வது காலாண்டு நிகர லாபம் 30% உயர்ந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்குகள் 1% உயர்ந்தன. காலாண்டு லாபத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 1% சரிந்தன. 4வது காலாண்டில் வலுவான வருவாய் ஈட்டியதன் அடிப்படையில் கோஃபோர்ஜ் நிறுவனத்தின் பங்குகள் 9% உயர்ந்தன. சிறப்பான நிதி முடிவுகளின் துணையுடன் பூனாவல்லா ஃபின்கார்ப் நிறுவனத்தின் பங்குகள் 4% உயர்ந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 3,621.58 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஆதித்யா பிர்லா கேப்பிடல், டேட்டா பேட்டர்ன்ஸ், செயில், நாட்கோ பார்மா, அதானி கிரீன் எனர்ஜி, வர்தமான் டெக்ஸ்டைல்ஸ், நெஸ்லே இந்தியா, கம்மின்ஸ், லாயிட்ஸ் மெட்டல்ஸ், கிர்லோஸ்கர் ஆயில், ஜே & கே வங்கி, ஹிட்டாச்சி எனர்ஜி உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியது.
கச்சா எண்ணெய் 1.67% சரிந்து பேரலுக்கு ஒன்றுக்கு 108 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகமானது.