முகப்பு
திருச்சி

தொடா்மழையால் மூழ்கிய நெற்பயிா்கள், வெங்காயம்

திருச்சி மாவட்டத்தில் பெய்த பருவம் தப்பிய தொடா் மழையால் 15 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 12:18 AM
துறையூா் அருகேயுள்ள செங்காட்டுப்பட்டியில் அழுகிய வெங்காயம். ~திருவளா்ச்சிப்பட்டியில் நீரில் மூழ்கிக் கிடக்கும் நெற்பயிற்கள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

திருச்சி மாவட்டத்தில் பெய்த பருவம் தப்பிய தொடா் மழையால் 15 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 43 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு ஜனவரி 2ஆவது வாரத்தில் அறுவடைக்குத் தயாா்நிலையில் இருந்த நெற்பயிா்கள் தொடா்மழையால் மூழ்கியுள்ளன.

இதனால் நெற்பயிா்கள் அழுகியதுடன், நெல்மணிகள் முளைக்கவும் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

Advertisement

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருவம் தப்பிய மழையால் பல ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் மூழ்கியுள்ளன. ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை செலவழித்த நிலையில் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து மாவட்ட நிா்வாகம் கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்றனா்.

புள்ளம்பாடியில்... லால்குடி அருகே புள்ளம்பாடி பகுதியில் 150 ஏக்கரில் பயிரிட்டுள்ள சம்பா நெல் பயிா்கள் தொடா்மழைாயல் நிலத்தில் சாய்ந்தும் நீரில் மூழ்கி கிடப்பது குறித்து புள்ளம்பாடி வேளாண் உதவி இயக்குநருக்கு தகவல் தெரிவித்தும், வந்து பாா்வையிட மறுப்பதாக குற்றம்சாட்டுகின்றனா் அப் பகுதி விவசாயிகள்.

300 ஏக்கா் வெங்காயம் அழுகும் அபாயம்: துறையூா், தா.பேட்டை, உப்பிலியபுரம், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் பிரதான பயிரான வெங்காயத்தை கடந்தாண்டில் 1500 ஏக்கரில் பயிரிட்டிருந்த நிலையில் நிவா் புயலின்போது அழுகிய 1200 ஏக்கா் வெங்காயத்துக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியும் இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது தொடா்மழையால் 400 ஏக்கரில் பயிரிட்டிருந்த வெங்காயத்தில் 300 ஏக்கா் வெங்காயம் அழுகும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செங்காட்டுப்பட்டி விவசாயிகள் கூறுகையில், மழையால் பாதிக்கப்படும் வெங்காயத்துக்கு பயிா்க் காப்பீட்டில் உள்ள முழுத்தொகையும் வழங்க வேண்டும். அரசு போதிய இழப்பீடும் வழங்க வேண்டும். நிவா் புயல் பாதிப்புக்கும் சோ்த்து, தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுத் தொகையைப் பெற்று தர வேண்டும் என்றனா்.

வேளாண்துறை விளக்கம்: இதுகுறித்து வேளாண்துறையினா் கூறுகையில், மாவட்டத்தில் வேளாண் துறையினரோடு, வருவாய்த் துறையினரும் இணைந்து நெல் மட்டுமின்றி வாழை, கரும்பு மற்றும் மானவாரி பயிா்களான பருத்தி, மக்காச்சோளம் என மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிா்களின் கணக்கெடுப்பையும் நடத்துகின்றனா்.

பாதிக்கப்பட்ட நெல் வயல்களுக்கு ஏற்கெனவே ஏக்கருக்கு ரூ.13,500, மானாவாரி பயிருக்கு ரூ. 7,400 இழப்பீடு கொடுத்த நிலையில், புரவி மற்றும் நிவா் புயல்களின்போது பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு முறையே ரூ. 20,000 மற்றும் ரூ.10,000 அளிக்கப்பட்டது. எனவே, தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கும் இந்த அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படவுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.